'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

24 Mar, 2025 | 06:06 PM
image

'கேஜிஎஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டாக்ஸிக் - ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக பிரத்தியேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்சிக் - ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' எனும் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி,  கியாரா அத்வானி, தாரா சுடாரியா, அச்யுத் குமார், சுதேவ் நாயர், அமித் திவாரி, அக்ஷய் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும், தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட இந்திய மொழிகளிலும், பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

'கேஜிஎஃப்' படத்தின் பிரம்மாண்டமான வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடிக்கும் படம் என்பதாலும், இந்த திரைப்படம் ஹொலிவுட் தரத்திற்கு நிகராக உருவாகி வருவதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பல தொழில்நுட்ப பணிகளில் ஏற்பட்டிருக்கும் தாமதம் காரணமாகவும், பட உருவாக்கம் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் புதிய வெளியீட்டு திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right