(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு அமைவாக 2025 ஜனவரி இல் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம், ஒரு நபர் ஒரு மாதம் வாழ்வதற்கு 16,334 ரூபா தேவை. 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 65,336 ரூபா தேவைப்படுகிறது . இநிலையில் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட் 50 ரூபாவால் அதிகரித்து வரும் வேளையில், 4 பேர் கொண்ட குடும்பத்தின் உணவுக்குத் தேவைகளுக்கு 65,336 ரூபா போதுமா ? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப்ப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வறுமைக் கோட்டை மதிப்பிடும் முறைமையில் பல பிழைகள் காணப்படுகின்றன. இது குறித்து ஆராய்ந்து, தரவு மையக் கொள்கைகளை வகுக்க வேண்டும். தவறான தரவுகளின் அடிப்படையில் அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப்பட்டால், சகலதுமே சீர்குலையும். முன்னைய அரசாங்கமும் இது போன்ற விஞ்ஞான பூர்வ தரவுகளின் அடிப்படையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்காமையினால் தோல்வி கண்டதொரு திட்டமாக அது இன்று மாறியுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்களிப்பை வழங்கும் நுண் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
முப்பெரும் நெருக்கடிகள் உருவாகி ஏற்படுத்திய மோசமான கடன்கள், அதன் நிலுவைத் தொகைகள் மற்றும் வட்டித் தொகைகள் போன்றன காணப்படும் சூழ்நிலையில், அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த கடன் சுமைக்கு நிலையான தீர்வொன்றை வழங்க வேண்டும்.
சர்வதேச வர்த்தக உறவுகளை நாம் பேணிக்கொள்ள வேண்டும். தற்போது நமது நாட்டில் இருதரப்பு மற்றும் பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டை அறிய விரும்புகிறோம்.
நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பிலான தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் ஏதும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா? வலுவான வர்த்தகக் கொள்கையை உருவாக்குவதற்கான பொறிமுறை இங்கு காணப்படுகின்றதா என்பதில் சிக்கல் காணப்படுகின்றது. .
ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை குறித்து மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. நாட்டை நேசிக்கும் எதிர்க்கட்சி என்ற வகையில், ஜி.எஸ்.பி.பிளஸுக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகிறது. இதனைப் பெற நாம் எமது பூரண ஆதரவை பெற்றுத் தருவோம். இது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை நல்கி வருவதால், இதனை பேணி வருவதற்கு ஏற்ற முறையான கொள்கையை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.
ஜி.எஸ்.பி.பிளஸ் மூலம் 3,451 பொருட்களுக்கான அமெரிக்க சந்தை வாய்ப்பு எமக்கு காணப்பட்டாலும், அது 2020 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இராஜதந்திர முன்னெடுப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. தமக்கு நல்ல இராஜதந்திர உறவுகள் இருப்பதாக அரசாங்கம் தேர்தல் காலங்களிலும் அதற்கு பின்னரும் தம்பட்டம் அடித்தது. அவ்வாறு இராஜதந்திர உறவுகள் இருக்குமானால் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமல்லவா?
நுகர்வோர் மற்றும் வணிகத் துறை குறித்து நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். உணவு பாதுகாப்பு குறித்த கொள்கைகளை உருவாக்கும் போது, நாம் சரியான வழியில் அதனை செய்ய வேண்டும். சரியான வழியில் செல்ல வேண்டும். இல்லையெனில், தவறான தரவுகளின் அடிப்படையில் அரச கொள்கைகள் வகுக்கப்படும். புள்ளி விபரங்கள் எவ்வாறு காணப்பட்டாலும், நாட்டு மக்கள் இன்று வாழ முடியாத நிலையை அடைந்துள்ளனர்.
வாடிக்கையாளரைப் பாதுகாப்பதில், உயர்தரத்துடன் வாடிக்கையாளரைப் பாதுகாக்கும் புதிய செயல்முறைக்குச் சென்று, சட்டத்தை வலுவாக்கி, நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு பயனுள்ள முறைபாடுகளைத் தீர்க்கும் பொறிமுறையை தாபித்து, உற்பத்தி தொடர்பான பாதுகாப்பை வழங்கி, சிறந்த விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளை உருவாக்கி, தரவு தொடர்பான பாதுகாப்பை ஏற்படுத்தி, அதனை கண்காணித்து வரும் பொறிமுறையை தாபித்து, இதனை வினைதிறனாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM