(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15 வீத வரி விதித்துள்ளது. இது ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 15 வீத வரியை உடனடியாக நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15வீத வரி விதித்துள்ளதன் மூலம் இது ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுகிறது.
அதனால் இந்த 15வீத வரியை அரசாங்கம் நீக்க வேண்டும். அதேநேரம் அரசாங்கம் 15 வீத வரி விதிப்பதாக கூறும்போது, இதற்குப் பொறுப்பான அமைச்சர் இதற்கு எதிரான கருத்தை வெளியிடுகிறார். அரசாங்கத்திடம் கூட இது தொடர்பில் சரியான கொள்கையொன்று இல்லை.
15வீத வரி விதிக்கப்பட்டதை மற்றுமொரு தரப்பினர் வெற்றியாக கருதின்றனர். சர்வதேச நாணய நிதியம் 3-0 வீத வரி விதிப்பை பிறப்பிக்குமாறு கூறினாலும், அரசாங்கம் 15%வீத வரியை பிறப்பித்துள்ளது. நமது நாட்டின் ஏற்றுமதி துறையில் வரிக் கொள்கையை தீர்மானிக்கும் விடயத்தை சர்வதேச நிதி நிறுவனத்துக்கு வழங்க முடியாது.
ஐ.டி ஏற்றுமதி துறையின் மூலம் வருமானம் ஈட்டும் தொழில்முனைவோர் பாரபட்சங்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே இத்துறையினர் இந்த 15 வீத வரி விதிப்புக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த 15வீத வரியை திருத்தியமைக்க வேண்டும் .
அமெரிக்காவால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வர்த்தக வரிக் கொள்கையால் எமது நாட்டின் ஏற்றுமதிகளுக்கு, வர்த்தகக் கொள்கைக்கு கடும் பாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தக வரி உயர்த்தப்பட்டிருக்கும் பிரச்சினைக்கு அரசாங்கம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சு உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் அனைத்து அமைச்சுக்களும் ஒன்றுபட்டு ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைக்கு முகம்கொடுக்க சிறந்ததொரு திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.
உற்பத்திப் பொருளாதாரம், உற்பத்திக் கைத்தொழில் ஊடாக எமது நாட்டிற்கு செல்வத்தை ஈட்டித்தரும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட கைத்தொழில்களை மேம்படுத்துதல் என்கின்ற இலக்கினை நோக்கி இதற்கூடாகப் பயணிக்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும்.
மேலும், தற்போதைய அரசில் பொதுவான தலைப்புகள் பற்றிய பேச்சு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. இந் நாட்டின் காட்டு யானைகளுள் ஆண் யானைகள் மிக வேகமாக இறக்கின்ற நிலைமைக்கு உட்பட்டிருக்கிறது, யூனிகார்ன் என்கின்ற ஆண் யானையும் கொல்லப்பட்டுள்ளது.
எமது நாட்டில் ஆண் யானைகள் ரீதியாக நோக்கும் போது 11 வீத அளவிலான தந்தமுடைய ஆண் யானைகள் காணப்படுகின்றன. இன்று அந்தத் தொகை 7 வீதமாக குறைந்துள்ளது. எமது நாட்டில் யானை வளங்களைப் பாதுகாக்க இதனையும் விட முறையான வேலைத்திட்டம் அவசியம். ஜீ பிஎஸ் தொழிநுட்பம் மூலம் ஆண் யானைகளைப் பாதுகாக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM