( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை இரண்டாம் பட்சமாக்குவது அல்லது புறக்கணிப்பது கவலைக்குரியது. யாப்புருவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் ' அரசியல் யாப்பு வரைவு உருவாக்க கவுன்சில்' ஒன்றை அமைக்க வேண்டும் இதற்குரிய வளங்களை அரசாங்கம் வழங்க வேண்டும்.பணிகளை ஒருவருட காலத்துக்குள் நிறைவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
புதிய அரசியல் கலாச்சாரத்துக்காக நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்து, பாராளுமன்ற அரசாட்சி முறைமையை மீண்டும் உருவாக்குவதும், நிறைவேற்றுத்துறை அதிகாரமில்லாத ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தாகவும், புதிய பாராளுமன்றத் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வாக்குறுதியளித்தது.
மக்கள் வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியாகிய நாங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான அவசியம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் குறிப்பிட்டோம். அதே நிலைப்பாட்டில் இன்றும் உள்ளோம். எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை.
இந்த நாட்டின் புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதுடன், பல தேவைகளுக்காக பலமுறை திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்புக்கு பதிலாக நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை நாட்டு மக்களில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதுவே சிறந்த சூழல்,வாய்ப்பு, பெரும்பான்மை பலம் அரசாங்கத்துக்கும் உண்டு. சிறந்த வரைவுக்கு நாங்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்.
காலத்தை தாழ்த்தினால் சிறந்ததை கூட அரசாங்கத்தால் செய்துக் கொள்ள முடியாமல் போகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இந்த அரசாங்கத்தக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளார்கள். ஆகவே பெரும்பான்மை பலத்துக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஜனாதிபதி பதவிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. சுதந்திரத்தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான அவசியத்தை குறிப்பிடவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் உரையாற்றுகையில் புதிய யாப்புருவாக்கம் பற்றி பேசவில்லை.
வரவு செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான விவாதத்தின் போது புதிய யாப்புருவாக்கம் குறித்து நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினேன். யாப்புத் திட்ட வரைவு மற்றும் குழு உருவாக்கம் பற்றி கேள்வியெழுப்பிய போது அவர் சிறந்த பதிலை வழங்கவில்லை. கவலைக்குரியது. புதிய யாப்பு உருவாக்கத்தை இரண்டாம் பட்சமாக்குவது அல்லது புறக்கணிப்பது கவலைக்குரியது.
புதிய யாப்புருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பிய போது அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் புதிய யாப்பு உருவாக்கம் தொடர்பான சட்ட வரைவினை தயார்படுத்தி சமர்ப்பித்துள்ளது அப்போதைய சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கு ஆதரவு வழங்கியது.
நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த வரைவினை முழுமையாக அமுல்படுத்துமாறு நாங்கள் குறிப்பிடவில்லை. புதிய பரிந்துரைகளை உள்ளடக்கலாம்.ஆகவே இதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் ' அரசியல் யாப்பு வரைவு உருவாக்க கவுன்சில்' ஒன்றை அமைக்குமாறும், இதற்குரிய வளங்களை அரசாங்கம் வழங்க வேண்டும். என்றும், புதிய யாப்புருவாக்க பணிகளை ஒருவருட காலத்துக்குள் நிறைவுப்படுத்துமாறும் வலியுறுத்துகிறேன்..புதிய யாப்புருவாக்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM