(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மக்கள் விடுதலை முன்னணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக இருளில் இருந்த பட்டலந்த அறிக்கையை அப்போது காணவில்லையா, என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் சபைக்கு சமர்ப்பித்து, உணர்வுபூர்வமாக பேசினார். சபாநாயகரும் கவலையடைந்தார். பட்டலந்த சித்திரவதை முகாமின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்களும் வலியுறுத்துகிறோம்.
1989 ஆம் ஆண்டு இந்த நாட்டில் பலர் கொல்லப்பட்டார்கள். அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டன இது தொடர்பிலும் விசாரணை செய்யுங்கள்.
சபை முதல்வர் தனது உரையில் ' சுமார் 25 ஆண்டுகாலமாக இருளில் இருந்த அறிக்கையை தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக ' குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அமைச்சரவையில் மக்கள் விடுதலை முன்னணியின் நான்கு உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை வகித்தார்கள்.
அமைச்சரவை கூட்டத்துக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் போது இருளில் இருந்த அறிக்கையை காணவில்லையா, அறிக்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வருமாறு அப்போது குறிப்பிட்டிருக்கலாமே,
அதேபோல் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிதியத்தை கொள்ளையடித்த ராஜபக்ஷர்களை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் விடுதலை முன்னணியினர் தான் முன்னிலையில் இருந்து செயற்பட்டார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் உரத்து உரையாற்றினார்.
மஹிந்தவின் ஆட்சியில் இருளில் இருந்த பட்டலந்த அறிக்கையை வெளியில் கொண்டுவர சொல்லியிருக்கலாமே, அதேபோல் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். அப்போது பட்டலந்த அறிக்கை பற்றி பேசியிருக்கலாமே.
அனைத்து அரசாங்கங்களிலும் இவர்கள் நேரடியாகவும், முறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்தினார்கள். ஆனால் இந்த அறிக்கையை வெளிக்கொண்டு வர முயற்சிக்கவில்லை.
தற்போது உணர்ச்சி வெளிப்பட பேசுகிறார்கள்.1980 ஆம் ஆண்டுகளுக்கு பிற்பட்ட காலத்தில் கொடிகாவத்தே சந்தானந்த தேரர், விஜயகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அக்காலப்பகுதியில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். நீதியை நிலைநாட்டுவதாயின் அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுங்கள்.
கலவரத்தின் போது ஒரு சந்தியில் ஒருவரை நிர்வாணமாக நிறுத்தி அவரை மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர் ஒருவர் எட்டி உதைப்பதை போன்ற புகைப்படம் இன்றும் பொது வலைத்தளங்களில் காணப்படுகிறது. ஆகவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM