(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மாதாந்தம் வழங்கப்படும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதுகளை இந்தியாவின் ஷுப்மான் கில், அவுஸ்திரேலியாவின் அலனா கிங் ஆகியோர் வென்றெடுத்தனர்.
ஐசிசி மாதாந்த விருதை ஷுப்மான் கில் வென்றெடுப்பது இது மூன்றாவது தடவையாகும்.
பெப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், நியூஸிலாந்தின் க்லென் பிலிப்ஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
ஷுப்மான் கில் கடந்த மாதம் 5 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 101.50 என்ற சராசரியுடன் 406 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் இந்த விருதுக்கு சொந்தக்காரர் ஆனார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 259 ஓட்டங்களைக் குவித்த ஷுப்மான் கில், அதே மாதம் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றி இருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பாகிஸ்தானுடனான சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.
ஐசிசி விருது வென்றது குறித்து கருத்து வெளியிட்ட கில்,
'பெப்ரவரி மாதத்திற்குரிய சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்றெடுத்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி எனது நாட்டிற்காக வெற்றிபெறுதைவிட வேறு எதுவும் என்னை உற்சாகப்படுத்தப்போவதில்லை.
'2025 சம்பியன்ஸ் கிண்ணத்தை நோக்கிய எமது பயணம் மிக முக்கியமானதாகும். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளின்போது நான் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தியதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வருடம் தனிப்பட்ட ரீதியாகவும் ஓர் அணி என்ற ரீதியாகவும் எங்களுக்கு ஓர் அற்புதமான ஆரம்பமாக அமைந்தது. இந்த வருடம் சிறந்த ஆட்டத் திறன்களை தொடர்ந்துவெளிப்படுத்த காத்திருக்கிறேன். அத்துடன் இந்தியாவுக்காக இன்னும் பல வெற்றிகளை ஈட்டுவோம் என நம்புகிறேன்' என்றார்.
இது இவ்வாறிருக்க, பெப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதை அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் அலனா கிங் வென்றெடுத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஒற்றை டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி இருந்தார்.
அப் போட்டியில் அலனா கிங் 15 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 46.4 ஓவர்களை வீசி 98 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். அவரது சராசரி 10.88 ஆக இருந்தது.
மாதாந்த ஐசிசி விருதை அலனா கிங் வென்றெடுத்தது இதுவே முதல் தடவையாகும்.
இந்த விருதுக்கு அவரது சக வீராங்கனை அனாபெல் சதர்லண்ட், தாய்லாந்தின் திப்பச்சா புத்தாவொங் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
ஐசிசி விருது குறித்து பேசிய அவர்,
'எமது அணி வீராங்கனைகளுக்கு இது ஒரு மகத்தான கோடைக்காலம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆஷஸை தக்கவைத்துக்கொண்டதில் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
'டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்க கிடைத்ததையிட்டு பெருமை அடைகிறேன். இந்த வெற்றியை நான் சதாகாலமும் நினைவில் வைத்திருப்பேன். மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆஷஸ் தொடரைவிட வேறு எதுவும் பெரியதல்ல. அந்த வகையில் அந்த டெஸ்ட் போட்டியில் நானும் ஒரு வீராங்கனையாக விளையாடக்கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM