மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கள ஆய்வு செய்து, கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை வழங்க சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் இன்று (19) அப்பகுதியில் கள விஜயம் செய்தபோதும் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு தடவை கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்றைய தினம் மூன்றாவது தடவையாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிக்கு கள விஜயம் செய்தனர்.
மன்னார் தீவு பகுதியில் கனிய மணல் அகழ்வினை முன்னெடுப்பதற்கான ஆய்வுப் பணிகளில் முன்னதாக இரு தடவைகள் ஈடுபட முற்பட்டும் முடியாமற்போனதைத் தொடர்ந்து, மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக மூன்றாவது முறையும் திணைக்களத்தினரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்களும் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு கட்டங்கட்டமாக வருகை தந்தன.
இதன்போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலில் சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர்.
அவ்வேளை, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில் அப்பகுதிக்கு கள விஜயம் செய்த அதிகாரிகளின் வருகைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
எனினும், மக்களின் காணிகளின் ஊடாக தனியார் காணியில் கனிய மணல் பரிசோதனைக்கான கள விஜய நடவடிக்கைகள் தொடர்ந்தபோது மக்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் இந்த கனிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இவ்விடயம் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர், உடனடியாக இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் அகழ்வுக்கான பரிசோதனை கள விஜயம் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பிரவேசித்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உட்பட கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM