(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமது மலையக உறவுகள் இன்றும் லயன் அறையில் வாழ்கிறார்கள். 200 ஆண்டு காலமாக இந்த நிலைமை தொடர்கிறது. அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகளே, மலையக மக்கள் உச்ச அளவில் உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்பு உச்ச அளவில் சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும். அவர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் முறையாகவும், உறுதியாகவும் கிடைக்கப் பெற வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வரவு செலவுத் திட்டத்தில் பல முற்போக்கான விடயங்கள் இருப்பதை வரவேற்கிறோம். தமிழர் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைத்த யாழ் நூலகம் தேர்தலுக்காக தீக்கிரையாக்கப்பட்டது என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆம் அது உண்மையே. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் செல்லப்பிள்ளைகளாக இருந்த காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பெயர்களும் யாழ் நூலக எரிப்புடன் குறிப்பிடப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தில் யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலத்தை புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையும் வரவேற்கிறோம்.
நான் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் ஆகவே எமது மாகாணம் மற்றும் மக்களின் நலன் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. கிழக்கின் அபிவிருத்தி பக்கத்து நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகால யுத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அதேபோல் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தின் விவசாய நிலங்களும்,உட்கட்டமைப்பும், குடியிறுப்புக்களும் பாதிக்கப்பட்டன. ஆகவே அபிவிருத்தி எனும் போது கிழக்கு மாகாணத்தை புறக்கணிக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை மற்றும் எழுவான்கரை ஆகிய பகுதிகளை நிலத்தால் இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம்.இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை உரிய தரப்புக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
கடந்த காலங்களில் பச்சை கட்சி ஆட்சியும் நீலம் கட்சி ஆட்சியிலும், மொட்டு கட்சி ஆட்சிலும் மாகாணங்களுக்கிடையில் வேறுபாடுகள் காணப்பட்டன. தற்போது சிவப்பு கட்சி ஆட்சியில் உள்ளது. ஆகவே அனைத்து மாகாணங்களும் சமத்துவமாக பார்க்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் தரப்பிலும், எதிர்தரப்பிலும் உறுப்பினர்கள் உள்ளார்கள். ஆகவே கிழக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தியில் கரிசனை கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நல்லிணக்கத்தை இதயசுத்தியால் ஏற்படுத்த வேண்டும்.வடக்கு, தெற்குடன் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க வேண்டுமாயின் யுத்தத்துக்கு பின்னரான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரகால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் கடந்த கால கசப்பான சம்பவங்கள் மீண்டும் தோற்றம் பெறாமலிருப்பதற்கான வலுவான பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் விசேடமாக குறிப்பிட வேண்டும். எமது மலையக உறவுகள் இன்றும் லயன் அறையில் வாழ்கிறார்கள். 200 ஆண்டுகாலமாகவே இந்த நிலைமை தொடர்கிறது.இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்ததால் மாத்திரமே முன்னேற முடியும்.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி சமத்துவமாக பார்க்க வேண்டும். அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள்.மலையக மக்கள் உச்ச அளவில் உழைக்கிறார்கள்.அவர்களின் உழைப்பு உச்ச அளவில் சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும். அவர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் முறையாகவும்இ உறுதியாகவும் கிடைக்கப் பெற வேண்டும்.
அரசியல் நோக்கத்துக்காகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க எவரேனும் முயற்சிக்கலாம். ஆகவே அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM