மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் விருப்பமின்றி இந்த கள ஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். இதன் காரணமாக சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் உண்டாகும் என ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
மன்னார் தீவுப் பகுதி என்பது மிகவும் குறுகிய தாழ்வான நிலப்பகுதியாகும். இது, கடல் நீர் மட்டத்திலிருந்து தாழ்வான நிலப்பகுதி என்பதால் மழைக்காலத்தில் நீர் வழிந்தோட முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்தும் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தை தாங்குதிறன் கொண்டதாக தீவுப்பகுதியின் தரைத்தோற்ற அமைவிடம் இல்லை. அதனால்தான் மன்னார் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டடங்களை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்குவதில்லை. ஆகவே, இப்பகுதியில் கனியமணல் அகழ்வதென்பது மிகவும் பாரதூரமான விளைவுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையின் கீழ் 23 அரச திணைக்களங்கள் மன்னார் தீவுப் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை வழங்குவதற்குரிய ஏற்பாட்டுக்காக முன்னர் இரண்டு முறை சென்றபோதும் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாக கள ஆய்வு மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் (17) மன்னார் நீதிமன்றத்தில் போராட்டத்துக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொண்டு, நாளை (19) அப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்த மக்களுடைய விருப்பம் இல்லாமல் தனியார் காணிக்குள் அத்துமீறி உட்புகுந்து இந்த ஆய்வை மேற்கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு கனியமணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதென்பது அந்த மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.
எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களுடைய விருப்பமின்றி செயற்படுத்த முடியாது. பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
ஆகவே, நாளைய கள ஆய்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் ஏனைய திணைக்களங்களும் உடனடியாக நிறுத்தவேண்டும் என இந்த உயரிய சபையின் ஊடாக கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM