(நெவில் அன்தனி)
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடான பாகிஸ்தான், ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தை பச்சை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட லாகூர் கோட்டை வளாகத்தில் கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைத்தது.
நடப்பு சம்பியனும் வரவேற்பு நாடுமான பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்குபற்றும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் நாளை புதன்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது.
ஐசிசி கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சி ஒன்றை பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக அரங்கேற்றவுள்ளது கடந்த 29 வருடங்களில் இதுவே முதல் தடவையாகும்.
1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியே பாகிஸ்தானில் கடைசியாக நடத்தப்பட்ட ஐசிசி கிரிக்கெட் போட்டியாகும்.
பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது போட்டி நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கிண்ண அறிமுக வைபவம் உள்ளூர் இரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை வெகுவாக தூண்டிவிட்டுள்ளது.
எட்டு வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்க்கப்படுவது என்ன என்பதற்கு அடையாளமாக லாகூர் கோட்டையை மகிமையுடன் ஒளிரச் செய்து ஒரு அற்புதமான காட்சியை ஏற்பாட்டாளர்கள் (பாகிஸ்தான் கிரிக்கெட் சபை) அரங்கேற்றி பாகிஸ்தான் இரசிகர்களை மகிழச் செய்தனர்.
2017ஆம் ஆண்டு சம்பியனான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற வீரர்கள், லாகூர் கோட்டையில் கிண்ண அறிமுக வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர். இதன் மூலம் வெற்றியீட்டிய நினைவுகளை மீட்டுப்பார்க்க உதவியது. லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தனது பரம வைரியான இந்தியாவை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றிகொண்டு பாகிஸ்தான் சம்பியனாகி இருந்தது.
எட்டு வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தான் எந்தளவு தயாராகவும் உற்சாகமாகவும் இருக்கின்றது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தினார்.
ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியானது தமது நாட்டிற்கும் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களுக்கும் ஒரு 'முக்கியமான சந்தர்ப்பம்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நக்வி கூறினார்.
'ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் 2025, எமது நாட்டில் அரங்கேற்றப்படுவதன் மூலம் 29 வருடங்களுக்கு பின்னர் ஐசிசி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கு திரும்புகிறது' என்பதையும் கிண்ண அறிமுக விழாவின்போது நக்வி தெரிவித்தார்.
'இந்தப் போட்டி கிரிக்கெட் என்பதைவிட பாகிஸ்தானின் விருந்தோம்பலையும் மற்றும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதற்கு கிடைத்துள்ள ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். போட்டிக்கான தீபத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றி வைப்பதற்கான பொருத்தமான அடையாள சின்னமாக லாகூர் கோட்டை கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
'இந்த இடத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், பாகிஸ்தானின் வளமான கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள கிரிக்கெட்டின் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றது' என்றார் நக்வி.
அத்தடன் 'ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரானது அரங்குகளை நிரப்புவதற்கான உங்கள் தருணம்' எனவும் இரசிகர்களுக்கு நக்வி நினைவுபடுத்தினார்.
பாகிஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ குழுவிலும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, அறிமுக அணி ஆப்கானிஸ்தான் ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன.
ஐக்கிய இராச்சியத்தில் 2017இல் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பாகிஸ்தான், அப் பட்டத்தை சொந்த மண்ணில் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் என்பது நிச்சயம்.
எவ்வாறாயினும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவிருப்பதுடன் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அப் போட்டியும் துபாயிலேயே நடைபெறும்.
இந்த இரண்டு குழுக்களிலும் முதல் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும். அவற்றில் வெற்றிபெறும் அணிகள் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மார்ச் 9ஆம் திகதி சந்திக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM