நாடு முழுவதும் ஞாயிறன்று ஏற்பட்ட திடீர் மின் தடையின் விளைவாக சுழற்சி முறையில் ஒன்றரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. திடீர் மின் தடையால் செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு சுமார் 4 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்திருந்தது.
இதன் காரணமான சில பிரதேசங்களில் மின் விநியோகத்தை வரையறைகளுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என்றும் மின்சாரசபை தெரிவித்திருந்தது.
அதற்கமைய மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கிடையில் ஒன்றரை மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சாரசபை தீர்மானித்திருந்தது. அந்த தீர்மானத்துக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அங்கீகாரமளித்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நான்கு குழுக்களின் கீழ் பட்டியலிடப்பட்ட பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இன்றைய தினமும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும். மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்களில் A,B,C,D என அடையாளப்படுத்தப்பட்டுள்ளவை ஒரு குழுவாகும். E,F,G,H,U,V என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் இரண்டாவது குழுவாகும். மூன்றாவது குழுவில் I,J,K,L,P,Q என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன. எஞ்சியுள்ள குழுவில் R,S,T,W ஆகிய பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலாவது குழுவில் உள்ளடங்கும் A,B,C,D பிரதேசங்களில் மாலை 3.30க்கும் 4 மணிக்கும் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 5 - 5.30க்கு இடையில் மீள வழங்கப்படும். இரண்டாவது குழுவில் உள்ளடங்கும் E,F,G,H,U,V பிரதேசங்களில் மாலை 5 - 5.30க்கு இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 6.30க்கும் 7 மணிக்கும் இடையில் மீள வழங்கப்படும்.
மூன்றாவது குழுவில் உள்ளடங்கும் I,J,K,L,P,Q பிரதேசங்களில் 6.30க்கும் 7 மணிக்குமிடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 8 - 8.30க்கு இடையில் மீள வழங்கப்படும். நான்காவது குழுவில் உள்ளடங்கும் R,S,T,W பிரதேசங்களில் 8 - 8.30க்கு இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 9.30க்கும் 10 மணிக்குமிடையில் மீள வழங்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் சில மணித்தியாலங்கள் மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பிரதேசங்களில் மீண்டும் இடைக்கிடை மின்தடை ஏற்பட்டது.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததாலேயே பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் இடைக்கிடை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டது. குறித்த மின்உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமையால் தேசிய மின் உற்பத்திபத்தியில் 900 மெகா வோல்ட் மின்சாரம் இழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த இயந்திரங்கள் மீள இயங்கும் வரை சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என மின்சாரசபை தெரிவித்திருந்தது.
அதற்கமைய மின்சாரசபையில் நேற்று காலை முதல் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தலைமையில் நீண்ட கலந்தாலோசனை இடம்பெற்றது.
இதன்போது லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் மீள இயக்கப்படும் வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனவே சுழற்சி முறையில் இரு தினங்களுக்கு மின்துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
மின்சாரசபையால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கு மின்சாரசபையின் கோரிக்கையை அங்கீகரித்தது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் நேற்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதேவேளை இதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பகுதிகள் பின்வருமாறு ;
https://cdn.virakesari.lk/uploads/medium/file/275080/Attachment_01_Power_Cut_Schedule_2025-02-10.pdf
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM