(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டியவை என சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு யார் பொறுப்புக்கூறுவது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதுடன் இந்த கொள்கலன்களில் இருந்த பொருட்களை சபைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில், சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சு இடம்பெற்று வருகின்ற வேளையில், இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு, துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஆனால், ஜனாதிபதி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல துறைகளுக்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுவதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டும் எம்மைப் போன்ற நாட்டுக்கு நல்லதல்ல.
இது தொடர்பில் பரிசோதிக்கப்படாமல் வெளியிடப்பட்ட “கட்டாயம் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்” என சிவப்பு முத்திரை பொறிக்கப்பட்ட 323 கொள்கலன்களை விடுவித்தமையை யார் பொறுப்பேற்பது? ஏன் அவ்வாறு விடுவிக்கப்பட்டன? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறே, கொழும்பு துறைமுகத்தில் நாளொன்றுக்கு பெறப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, தற்போது காணப்படும் கொள்கலன் பரிசோதனை ஆய்வு வசதிகளால் ஒரு நாளைக்கு பரிசோதிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, இந்த பரிசோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து பேணிச் செல்ல முடியுமா?
இலங்கையில் கொள்கலன்களை விரைவாக பரிசோதனை செய்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் எவை?
அத்துடன், கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதில் ஏற்பட்ட பாரிய நெரிசல் மற்றும் காலதாமதத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? இதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமைகள் எவை?இந்த கொள்கலன்களில் உள்ள பொருட்கள் என்ன? அவற்றை சபைக்கு சமர்ப்பியுங்கள்.
அவை சட்டவிரோதமான அல்லது மனித நுகர்வுக்கு தகுதியற்றவை அல்ல என்று பரிசோதனை மேற்கொள்ளாமல் முடிவு செய்தவர்கள் மற்றும் அவற்றை இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் யார் முழுப்பொறுப்பெடுப்பது?
அத்துடன், இவை சட்டவிரோத கொடுக்கல் - வாங்கல்கள் அல்ல என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் கேட்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM