(துரைநாயகம் சஞ்சீவன்)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் இன்று (24) பகல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் புகைப்படத்துக்கு தீபமேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டவுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஆளுநர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதனை ஆளுநரின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாண ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
திருகோணமலை துறைமுகத்தில் கடமையாற்றிய சுகிர்தராஜன் தனது தொழில் நிமித்தமாக திருகோணமலையில் வசித்துவந்ததோடு ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார்.
வீரகேசரி பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் “ஈழவன்” என்ற பெயரிலும் சுடர் ஒளி, உதயன் பத்திரிகைகளிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தார்.
இந்நிலையில், 24.01.2006 அன்று காலை வேலைக்குச் செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தபோது ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார். இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார்.
குறிப்பாக அந்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சிகள் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் காயங்களை நுட்பமாக படமெடுத்து, அந்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர்; அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலால் ஏற்பட்டவை அல்ல, அவை துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தார்.
மட்டக்களப்பு – குருமண்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.
இவர் தமிழ் சமூகத்தின் ஊடகப் போராளியாக செயற்பட்டு, தனது 36ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது இழப்பு தமிழ் ஊடக சமூகத்துக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM