குடும்பஸ்தன் - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

24 Jan, 2025 | 04:20 PM
image

தயாரிப்பு : சினிமாக்காரன்

நடிகர்கள் : மணிகண்டன் , சான்வீ மேக்னா,  ஆர். சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் மற்றும் பலர்.

இயக்கம்  :  ராஜேஷ்வர் காளிசாமி

மதிப்பீடு : 3/5

'குட்நைட்', 'லவ்வர்' என இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் மூலம் அவர் ஹாட்ரிக் வெற்றியை வழங்கினாரா ? இல்லையா?  என்பதை தொடர்ந்து காண்போம்.

தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பு பொறியாளராக கதையின் நாயகனான நவீன் (மணிகண்டன்) பணியாற்றுகிறார். இவர் மாற்று சாதியை சார்ந்த கதையின் நாயகியான வெண்ணிலாவை( சான்வீ மேக்னா) காதலித்து இரு தரப்பு பெற்றோர்களின் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொள்கிறார். அத்துடன் இவர்கள் முன்னிலையில் சுயமரியாதையுடனும் , கௌரவத்துடனும் வாழ்ந்து காட்டுவோம் என தம்பதிகள் சபதம் எடுக்கிறார்கள். 

ஓராண்டிற்கு பிறகு நகைக்கடை ஒன்றினை விளம்பரப்படுத்தும் பணியில் நவீன் தன் நண்பனுக்கு ஆதரவு தெரிவிக்க, அதனால் வேலை இழக்கிறார். வேலையிலிருந்து நீக்கப்பட்டதை தன் மனைவியிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். மாதந்தோறும் குறைந்த வருவாயை ஊதியமாக பெற்று வந்த நவீன்-  வேலையின்மை காரணமாக பொருளாதார பற்றாக்குறைக்கு ஆளாகிறார். இந்த தருணத்தில் நண்பர்களின் ஆலோசனையினால் கடன் வாங்குகிறார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்வு ஒன்றுக்காக மேலும் கடன் வாங்குகிறார். 

அந்த சுப நிகழ்வில் நவீன் தன்னுடைய சக்திக்கு மீறி மரியாதை செய்வதை அவருடைய அக்காவின் கணவரான ராஜேந்திரன் ( குரு சோமசுந்தரம்) கவனிக்கிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், நவீனுக்கும் ஏழாம் பொருத்தம். இருவரும் ஈகோ மோதலில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஒரு புள்ளியில் நவீனுக்கு வேலையில்லை என்பதும், அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி இருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரிய வருகிறது. இதனால் உளவியல் ரீதியாக நவீன் பாரிய பாதிப்பிற்கு ஆளாகிறான். அதன் பிறகு கடன் சுமையிலிருந்து மீண்டு, தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழ்கிறாரா? இல்லையா?  என்பதுதான் 'குடும்பஸ்தன் ' படத்தின் கதை.

கதையின் தொடக்கத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் வரை ரசிகர்களை சோதிக்கிறார்கள். அதன் பிறகு இயல்பான கதையோட்டத்திற்கு நகர்கிறது.

மைத்துனர்களின் ஈகோ மோதல், பெற்றோர்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி தொடர்பான கொமடி களேபரம், நாயகன் தனி அறையில் தன்னை பற்றி விமர்சித்துக் கொள்வது, இரவில் மனைவியின் வயிற்றில் இருக்கும் சிசுவுடன் பேசுவது, என பல காட்சிகள் உளவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் இருப்பதால் கதையுடன் இயல்பாக இணைந்து பயணிக்க முடிகிறது.  இருந்தாலும் கதையில் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் அதிகம். மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் நகைச்சுவை குறைவு.

இரண்டாம் பாதியில் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் கனவுகளும் பேசப்பட்டிருக்கிறது. அந்தக் கனவுகள் தற்போதைய சமூக பொருளாதார சூழல்களால் எப்படி கனவுகளாகவே நீடிக்கிறது என்பதையும் இயல்பாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதே தருணத்தில் பொருளாதார தன்னிறைவுடன் உள்ள குடும்பங்களில் வசிக்கும் பெண்மணிகளின் திருமண உறவு குறித்த உளவியல் பார்வைகளும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பட்ட கதாபாத்திரங்கள் தான் படத்தை பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது. உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமான தருணங்களை ஏற்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.

நவீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒரு முறை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நிரூபித்திருக்கிறார்.

வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை சான்வீ மேக்னா, சிறப்பான நடிப்பை வழங்கவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனக்கே உரிய தனித்துவமான அனுபவத்துடன் கூடிய நடிப்பை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

இவர்களைக் கடந்து சஷ்டியப்த பூர்த்தி திருமணத்தை செய்து கொள்ளும் ஆர். சுந்தர்ராஜன், கனகம்மா தம்பதியினர் செய்யும் சேட்டைகள் உற்சாகமான காட்சி மொழி கொமடி கலாட்டா.

மாண்ட்டேஜ் காட்சிகள் அதிகம் இருப்பதால் கதையை மீறி ஒளிப்பதிவாளர் துருத்திக் கொண்டு தனியே தெரிகிறார்.

ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை படமாளிகையில் உற்சாகமாக கரவொலி எழுப்பத் தூண்டுகிறது. குறிப்பாக 'ஜீரோ பேலன்ஸ் ஹீரோ' பாடல் கவனம் பெறுகிறது.

கதைக்களம் கொங்கு மண்டலம் என்பதால் கதாபாத்திரங்கள் கொங்கு தமிழில் பேசுவது சில இடங்களில் மட்டும் ரசிக்க முடிகிறது. சில இடங்களில் நீட்டிக்கப்பட்ட யூட்யூப் காணொளிகளை காண்கிறோமோ..! என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

இரண்டரை மணி நேரத்திற்கு கூடுதலான கால அவகாசம் கொண்ட இந்த திரைப்படத்தை இன்னும் படத்தொகுப்பாளர் நேர்த்தியாக தொகுத்திருந்தால் பாராட்டுகள் கூடுதலாக கிடைத்திருக்கும்.

இன்றைய சூழலில் குடும்பங்களின் மகிழ்ச்சி என்பது அந்த குடும்ப தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வருவாயில் தான் உள்ளதா? என்பது குறித்து பார்வையாளர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என இயக்குநர் சொல்லி இருப்பது பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

குடும்பஸ்தன் - நியாயஸ்தன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right