மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள்

23 Jan, 2025 | 12:37 PM
image

(நெவில் அன்தனி)

கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று (23) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுவுக்கான கடைசிக்கு முந்தைய லீக் போட்டியில் மலேசியாவை 53 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் கடைசி அணியாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி சுப்பர் சிக்ஸ் வாய்ப்பைப் பெறும் என்ற சூழ்நிலையில் இரண்டு அணிகளும் வெற்றியைக் குறிவைத்து களம் இறங்கின.

ஆனால், இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் தடவையாக திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டி சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.

அதேவேளை, இந்தத் தோல்வியால் வரவேற்பு நாடான மலேசியா போட்டியிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அசாபி கெலண்டர் 30 ஓட்டங்களையும் ஜஸாரா க்ளக்ஸ்டன் 19 ஓட்டங்களையும் அபிகெய்ல் ப்றைஸ் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 27 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.

பந்துவீச்சில் நூர் இஸத்துள் சியாபிக்கா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஸ்வா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுடன் வெளியேறியது.

அணித் தலைவி நூர் டானியா சியுஹதா 12 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் இந்த சுற்றுப் போட்டி முழுவதிலும் மலேசியா சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்ற ஒரே ஒரு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

மலேசியாவின் மொத்த எண்ணிக்கையில் 21 உதிரிகளே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

பந்துவீச்சில் சமாரா ராம்நாத் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் எரின் டியேன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நய்ஜன்னி கும்பபெச் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சமாரா ராம்நாத்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right