(நெவில் அன்தனி)
கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (22) இரவு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.
வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சு, அபிஷேக் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றியீட்டிய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.
இந்தியாவினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் 8ஆவது ஓவரில் 2 விக்கெட்ளை மாத்திரம் இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த இங்கிலாந்து அதன் பின்னர் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சில் 67 ஓட்டங்களுக்கு எஞ்சிய 8 விக்கெட்களையும் இழந்தது.
முதல் இரண்டு விக்கெட்களை 17 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறிய இங்கிலாந்துக்கு அணித் தலைவர் ஜொஸ் பட்லரும் ஹெரி ப்றூக்கும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 48 ஓட்டங்கள் உற்சாகத்தைக் கொடுத்தது.(65 - 3 விக்)
ஹெரி ப்றூக் 17 ஆட்டம் இழந்ததுடன் சீரான இடைவெளியில் 8 விக்கெட்கள் சரிந்தன.
ஜொஸ் பட்லர் தனித்து போராடி 44 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 12.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
சஞ்சு செம்சன், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் 18 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
சஞ்சு செம்சன் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, அடுத்து களம் புகுந்த அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 3 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (41 - 2 விக்.)
எனினும், அபிஷேக் ஷர்மாவும் திலக் வர்மாவும் 3ஆவது விக்கெட்டில் அதிரடியாக 42 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியா இலகுவாக வெற்றிபெறுவதற்கு உதவினர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களைக் குவித்தார்.
திலக் வர்மா 19 ஓட்டங்களுடனும் ஹார்திக் பாண்டியா 3 ஓட்டங்களுடனும் ஆட்டம இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: வருண் சக்ரவர்த்தி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM