(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆகிவற்றில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் குழாத்தில் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த குழாம் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பூர்வாங்க குழாமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 11ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ குழாம் அறிவிக்கப்படவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஜய்ஸ்வால், ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்திய குழாத்தில் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மத் சிராஜ் இடம்பெறவில்லை. உடற்தகுதியின்மை காரணமாக அவர் அணியில் இணைத்தக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், குறை உடற்தகுதியுடன் இருக்கும் ஜஸ்ப்ரிட் பும்ரா குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். ஒருவேளை பும்ரா விளையாடாவிட்டால் அவரது இடத்தை நிரப்ப ஹர்ஷித் ரானா தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் உபாதைக்குள்ளான பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை.
பும்ராவைப் போன்றே உபாதைக்குள்ளாகி இருக்கும் குல்தீப் யாதவ்வுக்கும் இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பிரகாசிக்கத் தவறியதால் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த ரோஹித் ஷர்மா தொடர்ந்தும் ஒருநாள் அணிக்கு தலைவராக விளையாடவுள்ளார்.
உதவி அணித் தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக விளையாடவுள்ளதால் ஜய்ஸ்வால் பெரும்பாலும் பதில் ஆரம்ப வீரராக இருப்பார் என அறிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் 2023இல் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய துடுப்பாட்ட வரிசையில் 3ஆம், 4ஆம், 5ஆம் இலக்கங்களில் இடம்பெற்ற விராத் கோஹ்லி, ராகுல் ட்ராவிட், ஷ்ரயேஸ் ஐயர் ஆகிய மூவரும் அதேவரிசையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டி லும் விளையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகிய மூவரும் பிரதான சகலதுறை வீரர்களாக அணியில் இடம்பெறுகின்றனர். அவர்களுடன் நான்காவது சகலதுறை வீரராக வொஷிங்டன் சுந்தர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அணியை மேலும் பலப்படுத்தும் வகையில் விக்கெட் காப்பாளரும் அதிரடி இடதுகை துடுப்பாட்ட வீரருமான ரிஷாப் பான்ட் குழாத்தில் இடம்பெறுகிறார்.
இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாத்தில் இடம்பெறும் மொஹம்மத் ஷமிக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருடன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் குழாத்தில் இடம்பெறுகிறார்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 6, 9, 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணிக்கு பாகிஸ்தான் செல்ல அரசாங்கம் அனுமதிக்காததால் இந்தியாவின் சகல போட்டிகளும் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் ஏ குழுவில் பங்களாதேஷை 20ஆம் திகதியும் பாகிஸ்தானை 23ஆம் திகதியும் நியூஸிலாந்தை மார்ச் 2ஆம் திகதியும் இந்தியா எதிர்த்தாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM