சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2'

15 Jan, 2025 | 06:13 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெற்ற 'ஜெயிலர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு பிரத்யேக காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'. சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகி, இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றி பெற்ற திரைப்படம். இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு.. இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்ற வினா எழுந்தது. இந்த தருணத்தில் இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஒரு நேர்காணலில், ஜெயிலர் படத்தின் அடுத்த பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக தெரிவித்திருந்தார் . இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதற்கான காணொளியில் இயக்குநர் நெல்சன் திலீப் குமாரும் ,இசையமைப்பாளர் அனிருத்தும் தோன்றி பகடித்தனத்துடன் உரையாடுவதும்.. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதும்.. இறுதியில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் தோன்றுவதும் இடம் பிடித்திருப்பதால்.. இந்த காணொளி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஜெயிலர் 2 திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -  சன் பிக்சர்ஸ் - நெல்சன் திலீப் குமார் - அனிருத் - கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'ஜெயிலர் 2' படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right