(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஈட்டிய வெற்றியினால் அடைந்துள்ள உற்சாகத்துடன் அவ்வணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெலிங்டனில் நாளை ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டத்தின் பிடி எமது கைகளிலிருந்த போதிலும் அது நழுவிப்போனதாகக் குறிப்பிட்ட அவர், கடைசிப் போட்டியில் ஈட்டிய வெற்றி வீரர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் நியூஸிலாந்து அணி பலம் வாய்ந்தது என்பதை அறிவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தொடர் தங்களுக்கு கடும் சவால் மிக்கதாக அமையும் என வெலிங்டனில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தெரிவித்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு சில வீரர்கள் இலங்கை குழாத்துடன் இணைந்துள்ளதாகவும் அவர்கள் இங்கு முன்கூட்டியே வருகை தந்து பயிற்சிகளில் ஈடுபட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்பதங்களைப் பழக்கக்பபடுத்திக்கொண்டதாகவும் சரித் அசலன்க தெரிவித்தார்.
பசுமையான ஆடுகளம் தொடர்பாக கருத்து வெளியிட்ட சரித் அசலன்க, 'ஆடுகளம் பசுமையாக காட்சிக் கொடுக்கின்றபோதிலும் போட்டியின்போது அது எவ்வாறு செயற்படும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. சில வேளைகளில் வெகப்பந்து வீச்சுகளின்போது பந்து சுவிங் செய்ய வாய்ப்பு உள்ளது. அதேவேளை துடுப்பாட்டத்திற்கும் சாதகமாக அமைவதுண்டு. எனவே நிலைமைக்கேற்ப எம்மை நாங்கள் தயார்படுத்திக்கொண்டு விளையாடுவோம்' என்றார்.
நாளைய போட்டியில் புதிய வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறுவார்களா என வினவப்பட்டபோது, 'நாளைய போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரை இன்னும் தீர்மானிக்கவில்லை. அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஏஷான் மாலிங்க, ஸ்விங் பந்துவீச்சில் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளார். எவ்வாறாயினும் இறுதி அணி காலையிலேயே தீர்மானிக்கப்படும்' என சரித் அசலன்க பதிலளித்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்
இலங்கை எதிர் நியூஸிலாந்து நேருக்கு நேர்
இலங்கையும் நியூஸிலாந்தும் 1979இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை 105 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.
அவற்றில் 52 - 43 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து முன்னிலை வகிக்கிறது. 9 போட்டிகளில் முடிவு கிட்டாததுடன் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
நியூஸிலாந்தில் விளையாடிய 42 போட்டிகளில் இலங்கை 12 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.
நியூஸிலாந்து மண்ணில் இலங்கை ஒரே ஒரு தடவை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றியிருந்தது.
தற்போதைய இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரியவின் தலைமையிலான இலங்கை அணி, 2001ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.
நடப்பு தொடரில் இலங்கை அணி பெரும்பாலும் 3 துடுப்பாட்ட வீரர்களுடனும், 4 சகலதுறை வீரர்களுடனும் 2 சுழல்பந்துவீச்சாளர்களுடனும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடனும் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை குழாம்
பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்) வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டசே, சமிது விக்ரமசிங்க, அசித்த பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்க, ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, மொஹமத் ஷிராஸ், லஹிரு குமார, அறிமுக வீரர் ஏஷான் மாலிங்க.
இது இவ்வாறிருக்க, இந்தத் தொடரை முன்னிட்டு நியூஸிலாந்தும் பலம்வாய்ந்த ஒருநாள் கிரிக்கெட் குழாத்தை பெயரிட்டுள்ளது.
நியூஸிலாந்து குழாம்
துடுப்பாட்ட வீரர்கள்: மிச்செல் ஹே, டொம் லெதம், வில் யங்.
சகலதுறை வீரர்கள்: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மைக்கல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், டெரில் மிச்செல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, நேதன் ஸ்மித்.
பந்துவீச்சாளர்கள்: ஜேக்கப் டஃபி, மெட் ஹென்றி, வில் ஓ'றூக்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM