2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு தமிழ் வேட்பாளரை நியமிக்க முடியாமையானது தமிழர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் லயன் மனோ தெரிவித்தார்.
இது குறித்து லயன் மனோ மேலும் கூறுகையில்,
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நாட்டில் தமிழர்கள் பல இன்னல்களுக்குள்ளான போதிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். அதேபோல் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடம் எவ்வித சிந்தனையும் இல்லாது கொழும்பு மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதியைக் கூட இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட நிறுத்தவில்லை. இதனால் அனைத்து தமிழ் பேசும் மக்களும் மன வேதனையடைந்துள்ளனர்.
நான் கடந்த 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு மட்டக்குளி தொகுதியில் வெற்றி பெற்று கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மக்களுடன் மக்களாக மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுடன் அந்நியோன்னியமாக பழகி சேவைகளை நிறைவேற்றி வருகின்றேன்.
இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் மாற்றுக் கட்சியான ஜனநாயக குரலில் இணைந்து போட்டியிட்டு கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, மக்களுக்கு சேவை செய்ய ஆவலாக இருக்கின்றேன்.
பல தசாப்த காலமாக கொழும்பு மாவட்டத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களின் சேவைகள், அவர்கள் தொடர்பான விபரங்களை தற்போது மக்கள் அறிந்து வைத்துள்ளனர். மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்னை தெரிவு செய்யுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.
கொரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றியுள்ளேன். அத்துடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளவன் என்ற அடிப்படையிலும் எதிர்காலத்தில் மக்களுக்கான சேவைகளை செய்வேன் என்ற அடிப்படையிலும் நான் மக்களிடம் வாக்குக் கேட்டு நிற்கின்றேன்.
கொழும்பு மாவட்டத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். ஆனால், வட கொழும்பைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. பல வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ளன. சேரிப்புறங்கள் அனைத்தும் கவனிப்பாரற்று காணப்படுகின்றன. நுளம்புத்தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன் கட்டாக்காலி நாய்களின் தொல்லையும் காணப்படுகிறது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் உள்ள பலருக்கு அரசாங்க வேலைகள் வழங்கப்படுவதில்லை. கல்வி வசதிகளும் பல மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, நாட்டில் அமைப்பு முறையை மாற்றம் செய்து அனைவருக்கும் கல்வி, சுகாதாரத்தை வழங்கும் நோக்கில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுத்து அனைவருக்கும் சேவைகளை வழங்க காத்திருக்கின்றேன்.
கொழும்பில் பல வருடங்களாக பொதுப் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 155, 102, 112, 168 இலக்க பஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு நாம் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் கடிதங்களை எழுதினோம். ஆனால், கடந்த அரசாங்கம் இது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தற்போது போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளேன். இது குறித்து அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில், எமது மக்களின் வாக்கின் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி செயலற்றுப்போயுள்ள பஸ் சேவைகளை மீண்டும் செயற்படுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM