தென்னிலங்கை போன்று வடக்கு அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் ; முன்னாள் எம்பி சந்திரகுமார்!

14 Oct, 2024 | 09:22 PM
image

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் போன்று வடக்கிலும் ஏற்பட வேண்டும்.   அப்போதுதான் தமிழ் மக்களும் அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும்  என ஐக்கிய மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் முன்னாள் எம்பி மு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.  

கிளிநொச்சியில் தனது ஆதரவாளர்களுடனான நேற்று ஞாயிற்றுக்கிழமை (13)  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,   

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் தொடர்ச்சியாக அரசியல் அதிகாரங்களில் இருந்து வருகின்றவர்கள்  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை கூட நிறைவு செய்யவில்லை மீள் குடியேற்ற காலத்தில் நான் அதிகாரத்தில் இருந்த போது மக்களை தேடித் தேடி செய்த பணிகளில் சிறிதளவேனும் பின்னர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தவர்கள் மேற்கொள்ளவில்லை.  

வெறுமனே அறிக்கைகளை விட்டுக்கொண்டும், பாராளுமன்றத்தில் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் போன்று போட்டி போட்டுக்கொண்டு பேசி  தங்களை தெரிவு செய்து அனுப்பி மக்களின் பணி முடிந்துவிட்டு காலத்தை கடத்தியவர்கள் மீண்டும் மக்களிடம்  வாக்கு கேட்டு வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற மனசாட்சி இன்றி  மக்கள் முன் வருகின்றவர்களை மக்கள் இந்த தேர்தலில் நிராகரிக்க வேண்டும்.  

இந்த 15 ஆண்டுகளில்  இவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை, அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்கவில்லை.  இவ்வாறான மக்கள்  பிரதிநிதிகள் மக்களுக்கு சாபக்கேடானவர்கள். இவர்களால் மக்களுக்கும் மண்ணுக்கும் எந்த நன்மையும் இல்லை. எனவே மக்கள் இந்த தேர்தலை தென்னிலங்கை போனற் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக மாற்ற வேண்டும்.  

அதிகாரத்தில் இருந்த போதும் சரி அதற்கு பின்னரான காலத்திலும் சரி இந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்த மக்களுடன்  மக்களுக்காக களப் பணியாற்றிவர்கள் நாம். எப்பொழுதும் மக்களுக்காகவே உழைத்து வருகின்றோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right