ஸ்திரமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் ; 4.4 வளர்ச்சி வீதம் 2024இல் பதிவாகும் - உலக வங்கி அறிவிப்பு - வறுமை இன்னும் சவாலாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டு 

12 Oct, 2024 | 08:47 AM
image

ரொபட் அன்டனி 

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக ஸ்திரமடைந்துள்ளது.  2024ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக பதிவாகும்.  இது ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டதை  விட அதிகமானது.  இலங்கையை பொறுத்தவரையில் இது ஒரு நல்ல செய்தியாகும் என்று உலக வங்கி அறிவித்திருக்கிறது.   

ஆனால் மீட்சியானது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை பராமரிப்பதில் தங்கியுள்ளது என்றும் உலக வங்கி வெளியிட்டிருக்கின்ற இலங்கை தொடர்பான புதிய அரையாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும்  வறுமை வீதமானது  இவ்வருடத்தில் 23.5 வீதமாகவுள்ளது. இது  இன்னும் ஒரு சவாலாகவே இலங்கைக்கு காணப்படுகிறது.  2026 ஆம் ஆண்டு வரை 20 வீதத்துக்கு அதிகமான வறுமை நிலை இலங்கையில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிது  எனவும்    உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை இலங்கையின் சமீபத்திய பொருளாதார ஸ்திரத்தன்மை, சந்தையின் நான்கு காலாண்டு வளர்ச்சி மற்றும் 2023 இல் நடப்புக் கணக்கு அதிகரிப்பு என்பன குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்" என்று உலக வங்கியின் இலங்கை  பணிப்பாளர் டேவிட் சிஸ்லன்   தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கால வாய்ப்புகள் என்ற தொனிப்பொருளில் இலங்கை குறித்த இந்த  அறிக்கையை வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள உலக வங்கியின் அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர்  மற்றும் உலக வங்கியின் பொருளாதார நிபுணர்களான  ரிச்சர்ட் வால்க்கர் மற்றும் ஸ்ருதி லக்டகியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இலங்கை கிட்டத்தட்ட 2.3 வீத பொருளதார வளர்ச்சியை நோக்கி நகரும் என்று இவ்வருட ஆரம்பத்தில் உலக வங்கி எதிர்வுகூறியிருந்தது. ஆனால் அதனை தாண்டி  இவ்வருடத்தில் 4.4 வீத வளர்ச்சி பதிவாகும் என்று  புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலிருந்து மறைபெறுமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்த இலங்கை 2023 ஆம் ஆடின் நான்காம் காலாண்டு முதல் நேர்பெறுமான வளர்ச்சியை பதிவு செய்துவருகிறது. 

இதேவேளை இலங்கைக்கு வருடத்திற்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள்  இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.  தற்போது இலங்கையானது வருடம் ஒன்றுக்கு சுமார் 12 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெறுகிறது. 

‘’ இலங்கை அதிக ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டை இலக்காகக் கொள்ள வேண்டும், வரிச் சலுகைகள் இருந்தாலும் முதலீடுகள் வரவில்லை. முதலீடுகளை அதிகரிப்பதற்கு வரிச் சலுகைகள் உதவவில்லை’’  என்று உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர்  கெவோர்க் சர்க்ஸ்யான் குறிப்பிட்டார்.   

இலங்கை குறித்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர்  கெவோர்க் சர்க்ஸ்யான்  குறிப்பிடுகையில் 

இலங்கையின் பொருளாதாரம் வேகமாக  ஸ்திரமடைந்திருக்கின்றது.  இது ஒரு நல்ல செய்தியாகும்  இது ஆச்சரியமான விடயமாகத் தான் இருக்கின்றது. ஆனால் பாதகமான செய்தியும் உள்ளது.   இன்னும் இலங்கைக்கு சவால்கள் காணப்படுகின்றன.  வறுமை தொடர்ந்து 25 வீதமாகவே பதிவாகி கொண்டிருக்கின்றது.   இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் வறுமை கோட்டுக்குள் இருக்கின்றார். இது  மிக விரைவாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.     இங்கு மேஜிக் எதுவுமில்லை. 

மாறாக கடின உழைப்பும் மறுசீரமைப்புகளின் தொடர்ச்சியுமே அவசியமாகின்றன.  இவற்றின் ஊடாகவே இந்த விடயத்தில் முன்னேற்றத்தை காண  முடியும். இதேபோன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்படுவது அவசியமாகும்.    மறுசீரமைப்புகள் மிக முக்கியமாகும்.  புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  

உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வால்க்கர் குறிப்பிடுகையில்

நாம் அரசாங்கத்துக்கு பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது மறுசீரமைப்பு கொள்கைகள் தொடர வேண்டும்.    மறுசீமைப்புக் கொள்கையை தொடர்வதன் ஊடாகவே முன்னேற்றம் ஏற்படும்.   அதுமட்டுமின்றி வறுமையை குறைப்பதற்கு நடவடிக்கைகள் அவசியமாகின்றன.  இதற்கு கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர வேண்டும்  பெண் தொழிற்படை  அதிகரிக்கப்படுதல், பொருளாதார டிஜிட்டல் மையமாகுதல்,   ஏற்றுமதி அதிகரிப்பு என்பன முக்கியமாகும். இலங்கையின்  ஏற்றுமதியை 10 பில்லியன் டொலர்களினால் அதிகரிக்க முடியும்.  அதற்கான   ஆற்றல்  காணப்படுகின்றது.  இலங்கையின் இறக்குமதியை பார்க்கும் போது கடந்த பல வருடங்களில்   அதிகரித்திருக்கின்றது.  ஆனால் ஏற்றுமதி  இன்னும் அதிகரிக்காமல் இருக்கின்றது. 

ஏற்றுமதியை 10 பில்லியன் டொலர்களினால் அதிகரிக்கும்போது மேலும் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் புதிதாக உருவாக்க முடியும்.  இந்த ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஏற்றுமதியை  திசைமுகப்படுத்திய  வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியமாகும்.  அதற்கு புதிய தீர்வைகளை வழங்க வேண்டும்.  வரி கட்டமைப்பில் மாற்றத்தை செய்ய வேண்டும்.  வரி கட்டமைப்பை மாற்ற செய்யும் போது அரச வருமானம் பாதிக்கப்பட கூடாது. அரச வருமானத்தை பாதிக்காமல்   தீர்வைகளை குறைத்தால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். எனவே  ஏற்றுமதி இலக்காகக் கொண்ட வகையிலேயே வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.  வெளிநாட்டு முதலீடுகளுக்கான சூழல் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.   அதற்கு நல்லாட்சி மிக முக்கியம். 

அதேபோன்று உட்கட்டமைப்பு வசதிகளும் முக்கியமாகும்.  அதுமட்டுமின்றி   சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ள வேண்டும்.   அதுமட்டுமின்றி முதலீடுகளுக்கான ஒற்றைச் சாளர முறை பயன்படுத்தப்படுவது மிகவும் முக்கியமாகும். 10 பில்லியன் டொலர்களால் ஏற்றுமதி அதிகரிக்க முடியும் என்பது தொடர்பாக  சிந்திக்க வேண்டும். அதனூடாக மிகப்பெரிய மாற்றத்தை பொருளாதாரத்தில் ஏற்படுத்த முடியும்.  தற்போது உலக வங்கிக்கு  அரசாங்கத்துடன் எந்த விதமான திட்டங்களும் நிலுவையில் இல்லை. 

புதிய அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.  பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தின் திட்டங்களை நாங்கள் அறிந்துகொண்டு அதிலிருந்து எவ்வாறு எமது   உதவி திட்டங்களை வழங்க முடியும் என்பதை நாம் ஆராய்வோம்.   எல்லாவற்றுக்கும் மிக முக்கியமாக நாட்டில் இந்த மறுசீரமைப்பு கொள்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவற்றை நடுவில் நிறுத்தி விடக்கூடாது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு...

2025-05-23 11:12:17
news-image

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட...

2025-05-23 10:54:17
news-image

இன்றைய தங்கவிலை நிலைவரம்

2025-05-23 10:46:13
news-image

கொழும்பில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட...

2025-05-23 10:28:33
news-image

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள்...

2025-05-23 09:55:17
news-image

கொழும்பு, புறநகர் பகுதிகளில் நீர்வெட்டு

2025-05-23 09:51:02
news-image

யாழில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான...

2025-05-23 10:16:15
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-05-23 09:48:26
news-image

பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேர்...

2025-05-23 09:30:32
news-image

இன்றைய வானிலை

2025-05-23 06:04:40
news-image

யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் -...

2025-05-23 03:14:38
news-image

பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் 6மாதத்தக்கு...

2025-05-23 03:08:37