(அபிலாஷனி லெட்சுமன்)
(படப்பிடிப்பு - எம்.எஸ். சலீம்)
கலைமகளுக்கு உகந்த நவராத்திரி - வாணி விழாவை முன்னிட்டு இசைக்கலைமணி, கலா வித்தகர் ரோகிணிவதனி யசோதரனின் நாதத்வனி வயலின் கலாலய மாணவர்கள் வழங்கிய “வயலின் வாத்திய பிருந்தம் 2024” கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் ஜனனி செந்தூரன் வருகைதந்ததோடு, சங்கீத ஆலோசகர் கலாபூஷணம் யசோதரா பாலேஸ்வரன், குமாரோதயம் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஞானசக்தி ருஷிவா, பவானி முகுந்தன் (இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்), எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், கொழும்பு நல்லாயன் மகளிர் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை சியாமளா அனந்தன், கொழும்பு புனித கிளேயர் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியை கஸ்தூரி மதிமுகராஜா மற்றும் நடேசன் இசைக்கோவில் இயக்குநர் விஷ்ணு பிரியா ரட்ணகுமார் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வெள்ளை தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியை போற்றும் நவராத்திரி கொலு பூஜைகளை தொடர்ந்து, வாத்திய பிருந்தம் ஆரம்பமானது.
பொதுவாக தமிழ்ப் பண்பாட்டு அரங்க நிகழ்வுகளில் வயலின் முக்கிய இசைக்கருவியாக திகழ்கின்றது. வாயால் பாடப்படும் பாடல்களைத் தத்ரூபமாக வயலின் இசையில் கேட்கும்போது ஏற்படும் பரவசம் அலாதியானது.
இந்த வயலின் வாத்திய பிருந்தம் இசை நிகழ்வுக்கான இசைப் பங்களிப்பினை மிருதங்க வித்துவான் ரகுநாதன், தபேலா கலைஞர் விசாரத சிவதர்ஷன் மற்றும் கடம் வாத்திய கலைஞர் பிரவிந்த் ஆகியோர் வழங்கியதுடன் நாதத்வனி வயலின் கலாலய மாணவர்கள் சுமார் என்பது பேர் இருந்து வயலின் இசையை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
வாத்திய பிருந்தமும் பிரிவுகளும்
வாத்திய பிருந்தம் பிரிவு 01இல் “ஸ்ரீ வாதாபி...” கீர்த்தனை, “எந்தரோ மஹானுபாவுலு...” பஞ்சரத்தினக் கிருதி, “விஜயாம்பிகை...” கிருதி, “கலியுகவரதன்...” கீர்த்தனை ஆகியவை மிக அழகாக இசைக்கப்பட்டன.
வாத்திய பிருந்தம் பிரிவு 02இல் ஜதீஸ்வரம், கருணிம்ப உருப்படி, ஸாரஸ நேத்ரா உருப்படி,“ஓம் சக்தி ஓம் ....”, “ஜெய ஜெய ஜெய சக்தி...”, “கல்வித் தெய்வம்...” ஆகிய பக்திப் பாடல்கள் அழகிய வயலினிசையாக ஒலித்தன.
வாத்திய பிருந்தம் பிரிவு 03இல் “கணநாதா....” கீதம், “முசிக வாகன...” பக்திப் பாடல், "சாமகானப்பிரியே....", “கமலாச்சன...” நோட்டுஸ்வரம் உருப்படி, “சியாமளே மீனாட்சி...” நோட்டுஸ்வரம் உருப்படி ஆகியவை வாசிக்கப்பட்டன.
வாத்திய பிருந்தம் பிரிவு 04இல் “வலசி...” நவராகமாலிகா வர்ணம், “வாதாபி கணபதி...” கீர்த்தனை, “சுதாமயி சுதா நித...” கீர்த்தனை, “மாணிக்க வீணை ஏந்தும்...” பக்திப் பாடல், “ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா...” பாடல் ஆகியவற்றை இசைத்தார்கள்.
வாத்திய பிருந்தம் 05இல் “ரகுநாயகா...” கீர்த்தனை, “ரமா ரமண...” கிருதி, “பிரம்ம மொகடே...”, “பாக்யலக்ஷ்மி பாரம்மா...”, “தேவி கருமாரியம்மா...” பக்திப் பாடல் இசைக்கப்பட்டன.
வாத்திய பிருந்தம் பிரிவு 06இல் “ஏறுமயில்..” “திமிரவுததி...” ஆகிய திருப்புகழ் பாடல்களும் “வரதா மணி நீ...”, “நிறைமதி...” பாடல்களையும் இசைத்தனர்.
மாணவர்கள் மேடையில் குழுவாக அமர்ந்து, தன் அழகிய கைகளினால் வயலினை ஏந்தி இசைத்த காட்சி மிக அழகாக இருந்தது.
இந்த ஆறு பிரிவுகளிலும் இடம்பிடித்த வயலினிசை அனைவரது மனதையும் கவர்ந்தது. மட்டுமன்றி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டும் வகையில் கலாலயா மாணவர்கள் வயலின் இசையினை வழங்கினர்.
இந்த இசை பார்வையாளர்களின் காதுகளுக்கு இனிமை சேர்த்ததோடு, கண்களுக்கு புத்துணர்ச்சியை தந்தது.
குறிப்பாக, “தேவி கருமாரியம்மா...” பக்தி பாடலிசை வயது முதிர்ந்த பார்வையாளர்களின் மனதை கவர்ந்ததோடு, தாளம் போட்டு கேட்குமளவுக்கு வாசிக்கப்பட்டது.
குருவின் வழிநடத்தலும் மாணவர்கள் கலையின் மீது கொண்ட ஆர்வமும் இந்த இசைக்கச்சேரியில் வெளிப்பட்டது.
முத்தேவியருக்கும் உகந்த நவராத்திரி கால இசை நிகழ்ச்சியான வயலின் வாத்திய பிருந்தம், நல்லதொரு இசையனுபவத்தை பார்வையாளர்கள் நேரடியாக பெறக்கூடியதாக அமைந்தது. அதற்கு வயலின் இசையுடன் இணைந்த அணிசேர் வாத்தியக் குழுவும் துணையாக இருந்தது.
பிரதம விருந்தினர் உரை
இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் ஜனனி செந்தூரன், இந்த நிகழ்வானது நவராத்திரி காலத்திலும் சர்வதேச ஆசிரிய தினத்திலும் இடம்பெறுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்ததோடு, வயலினிசை வழங்கிய மாணவர்களையும் பாராட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்றைய காலகட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி சமுதாய சீரழிவுகளை நோக்கி இளைஞர்கள் நகர்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதனை கலைகளின் ஊடாகத்தான் மாற்றியமைக்கமுடியும். இதில் பெற்றோர்களாகிய உங்களுக்கு அதிக கடமைகள் இருக்கின்றன.
இந்த அரங்கிலே இத்தனை மாணவர்கள் வயலின் கலையினை கற்பதற்கும் அவர்களை பெற்றோர்கள் ஊக்குவிப்பதற்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய காலத்தில் பல்வேறு தொழில்துறைகளில் பணியாற்றுபவர்கள் ஒரு கலையினை கற்றறிந்துள்ளனர். அனைத்து நிகழ்வுகளிலும் கலை ஊடுருவியுள்ளதால் எமது கலை, கலாசாரத்தை வளர்க்கக்கூடியதாக உள்ளது.
இன்றைய மாணவர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக கல்வி நடவடிக்கையினை அறிந்து கற்பவர்களாக உள்ளனர். ஆனால், குருவிடம் நேரடியாக கல்வி கற்கும்போது சிறந்த தலைமுறையினை உருவாக்க முடியும். இனிவரும் காலங்களிலும் அடுத்த சந்ததியினர் கலைகளை கற்று சமுதாயத்தில் நல்ல பிரஜையாக நிலைபெற வாழ்த்துக்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM