(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், அவ்வேளை பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து மற்றும் டெல்லி விஜயத்துக்கான அழைப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கவுள்ளார்.
அத்துடன் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 79ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாடு திரும்பியதும், இலங்கைக்கான விஜயம் குறித்து திகதி தீர்மானிக்கப்படும் என்று டெல்லி தகவல் மூலம் குறிப்பிட்டதுடன், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக அவரது விஜயம் இடம்பெறும் என்றும் உறுதிப்படுத்தியது.
ஈராண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் - பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சியுடனான ஆட்சி மாற்றம் என்பவற்றின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மார்க்சிச சித்தாந்த கொள்கைகளை கொண்ட 55 வயதுடைய அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையின் ஜனநாயக தேர்தலில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அரசியல் மாற்றமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தெற்காசியாவில் மாலைத்தீவு மற்றும் பங்களாதேசத்தை தொடர்ந்து இலங்கையிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (சீன சார்பு) பிரிந்து சென்ற ரோகண விஜயவீர 1965ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) நிறுவினார்.
இதனை தொடர்ந்து ஜே.வி.பியின் ஆயுத கிளர்ச்சிகளுக்கு பின்னர் 1990 களில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து, 1994ஆம் ஆண்டுக்கு பிறகு இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஜே.வி.பி போட்டியிட்டது. அன்று தொடக்கம் அண்மைய காலம் வரை தேசியவாதம் சார்ந்த இந்திய எதிர்ப்பு கொள்கையுடன் ஜே.வி.பி செயல்பட்டது.
ஆனால் 2014ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, அநுரகுமார திசாநாயகவின் தலைமைத்துவத்தில் புதிய திசையில் ஜே.வி.பி பயணித்து இன்று வெற்றி இலக்கை அடைந்துள்ளது.
எனினும் பிராந்தியத்தில் உள்ள போட்டித் தன்மையின் அடிப்படையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து இந்தியா மாத்திரமன்றி, சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளன. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் இந்தியா ஒருவித பதற்றத்துடன் இருந்தபோதிலும் சீனா அமைதியாகவே இருந்தது. தேர்தல் முடிவடைந்து அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் கூட இன்றளவில் இந்த நிலை தொடர்கின்றது.
மறுபுறம் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கைகள் இலங்கையின் புதிய ஆட்சியில் எவ்வாறு தொடரப்படும் என்பதிலும் தெளிவற்ற நிலையே உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பில் இலங்கை இணையும் பட்சத்தில் சீனாவின் இராஜதந்திர நடவடிக்கைகள் கொழும்பில் செயல்திறன் மிக்கதாக வெளிப்படும். ஏனெனில், பிரிக்ஸ் அமைப்பில் முதன்மையான நிதி வழங்குனராக சீனாவே உள்ளது.
அதே போன்று இலங்கையின் கடன் நெருக்கடி, புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மூலோபாயத்திலும் தற்போதைய ஆட்சி மாற்றம் தாக்கம் செலுத்துகிறது.
குறிப்பாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பிலும், அந்நிய செலாவணி இருப்பிலும் சீனாவின் பங்கு முக்கியமாகியது. இதனால் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி ஆட்டமின்றி நகர்த்தப்பட வேண்டுமாயின் சீனாவின் ஒத்துழைப்பு பலவழிகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. எனவேதான் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அமைதியாக இருந்த சீனா தற்போது மௌனம் கலைத்து புதிய அரசாங்கத்திற்கு புதிய உறுதிமொழிகளை வழங்கி வருகின்றது.
இத்தகைய சூழலில் இந்தியாவின் அயலகத்துக்கு முதலிடம் கொள்கையில் இலங்கையின் புதிய ஆட்சியை இணைத்து பயணிப்பதில் டெல்லிக்கு ஐயப்பாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM