விரக்தியின் அடையாளமே வட, கிழக்கில் இன்று ஹர்த்தால் : சபையில் முதலமைச்சர்

Published By: MD.Lucias

27 Apr, 2017 | 12:35 PM
image

இன்று எம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றது என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று(27) காலை ஆரம்பமான  வட மாகாணசபை அமர்விலே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவருடை உரை பின்வருமாறு,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் இன்று நடைபெறுகின்றது.

திருகோணமலையில் போராடிக்கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட மக்களைக் கூட்டாக அண்மையில் சந்தித்தேன். அதற்கு முன்னர் வடமாகாணத்திலும் பல குழுக்களைச் சந்தித்தேன். கடந்த பல நாட்களாக காணமற் போன தங்கள் உறவுகள் பற்றியும் இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்தமை பற்றியும் இம் மக்கள் தமது வருத்தங்களையும் கரிசனைகளையும் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எடுத்துக் காட்டி வருகின்றார்கள். இது பற்றி ஜனாதிபதிக்கு நான் நீண்ட கடிதம் அனுப்பியிருந்தேன். அது பற்றி 'பேசலாம் வாருங்கள்' என்று தினம் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அவர்களுக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஏதேனும் நற்செய்தி அரசாங்கத் தரப்பில் இருந்து வராதா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார்கள். 

பலரின் 50 நாட்களுக்கு மேலான போராட்டங்கள் உத்தியோக பூர்வமாக எந்தவித எதிர்வினையும் கொண்டு வராத நிலையில்த்தான் நீதிக்கான ஒரு காத்திரமான ஜனநாயக செயற்பாடு என்ற முறையில் இன்றைய மக்கள் அணி திரள்வு இன்றைய கடையடைப்புப் போராட்டமாக நடைபெறுகின்றது. 

இந்த நிலையில் முஸ்லிம் சகோதரர்கள், சிங்கள சகோதரர்கள் அடங்கலான வடக்கு கிழக்கு சகல மக்களும் தமது மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒருங்கு சேர்ந்து போராடுவது கட்டாயமாகியுள்ளது. 

நாம் யாவரும் இம் மக்கள் போராட்டத்திற்கு எமது ஆதரவினை எடுத்துக் காட்டுவதிலிருந்து எமது தெற்கத்தைய சிங்களச் சகோதரர்களும் மத்திய அரசாங்கமும் சர்வதேச அரசாங்கங்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எம் மக்களையும் அவர்களின் ஆதங்கங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல. மக்களின் மனோநிலையைத் தவறாகப் புரிந்து கொண்டு பிழையான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்க எத்தனித்தால் அது பாரதூரமான விளைவை எம்மக்களுக்குத்தான் ஏற்படுத்தும். 

எமது கோரிக்கைகள் நியாயமானவை. அவை எமது அடிப்படை உரிமைகள் சார்ந்தவை. ஆகவே அவற்றிற்கு தீர்வு காணுதல் அவசியம். தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பின்நிற்பதே அல்லது தாமதிப்பதே இன்றைய வடக்கு கிழக்கு ரீதியான போராட்டத்தின் அடிப்படைக் காரணமாகும். எமது பொறுப்புக் கூறலை நாங்கள் தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு இன்றைய பூரண ஹர்த்தால் ஒரு உதாரணமாகும். 

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஹர்த்தாலுக்கு எம் மக்கள் காட்டும் கட்சிப் பாகுபாடற்ற கரிசனை மிக்க ஒத்துழைப்பை வடக்கு கிழக்கு மக்களின் ஒற்றுமைக்கான ஒரு அணிதிரள்வாகவே நான் காண்கின்றேன்.

எமது கஷ்டங்கள், துன்பங்கள், அல்லல்கள், அவலங்கள் ஆகியவற்றை மற்றவர்களும் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது இரவு பகலாகப் போராடும் மக்களுக்கு ஒருவித மனநிறைவை ஏற்படுத்தும். அத்துடன் எமது ஏகோபித்த பங்களிப்பு எமது மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும்.

இதன் காரணமாகவே இன்று எமது வடக்கு மாகாணசபை தனது நிகழ்ச்சிகளைச் சுருக்கி தமது ஏகோபித்த ஆதரவினை போராடும் எமது மக்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளது. கௌரவ அவைத்தலைவரும் அதற்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்திருப்பது எமது மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக தமது கரிசனைகளை உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. நாம் ஒன்று பட்டால்த்தான் எமக்கு உண்டு வாழ்வு. இதனை எம் மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம் இன்று உதயமாகியுள்ளது. போராடும் அனைவருக்கும் அவர்தம் ஆதரவாளர்களுக்கும் இறையாசி பூரணமாகக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51