அரச வங்கி கட்டமைப்புக்குள் பெரும் செல்வந்தர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் பிணையின்றி பெற்றுக்கொண்ட கடன் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இரத்து செய்யப்பட்டது என்று கேள்விப்படுகிறோம். இதுகுறித்து நாம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது அவை இரகசிய விடயங்கள். அவற்றை வெளியிட முடியாது என்று கூறப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அப்படி கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இவ்வாறான திருட்டுத்தனமான கொடுக்கல் - வாங்கல்களையும் கடன் இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலையும் வெளியிடுவோம். அநீதியான முறையில் இவ்வாறான சலுகைகளை பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும் அந்தக் கடன் தொகையை மீள செலுத்த வேண்டியேற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பில் வெற்றிகரமாக நேற்று சனிக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வங்கித்துறையில் பணியாற்றுபவர்களின் “ஐக்கிய வங்கியியலாளர்களின் மாநாட்டில்” உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண பொது மக்களுக்கு ஒரு சட்டமும், நட்பு வட்டார தொடர்புகள் உள்ள செல்வந்தர்களுக்கு வேறு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இடமளிக்க முடியாது.
சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையாளார்களின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு முடியுமாக இருந்த போதிலும், நட்பு வட்டார கோடீஸ்வரர்களின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயிருக்கின்றது.
இவை அனைத்தும் சட்ட ரீதியாக இடம்பெற வேண்டும். அனைவருக்கும் சட்டத்தை சமமான முறையில் செயற்படுத்த வேண்டும். செல்வமும் அதிகார தொடர்புகளும் இருக்கின்றது என்பதற்காக கடன்களை இரத்து செய்கின்ற யுகத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வரிச்சூத்திரத்தை மாற்றுவோம்
எமது நாட்டில் காணப்படுகின்ற வரி சூத்திரம் அசாதாரணமான முறையில் செயற்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட வரி முறை தொடர்பில் வரி ஆணைக்குழு அறிக்கையில் உள்ளது.
வரி ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் எமது நாட்டின் வரி வருமானத்தில் 80 வீதமானவை மறைமுகமாகவும் 20 வீதமானவை வெளிப்படையாகவும் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மறைமுகமான வரி பிற்போக்கான வரியாக உள்ளது. இந்த வரியானது சம்பாதிக்கின்ற வருமானத்தின் அளவு எதுவாக இருந்தாலும் சமமாக செலுத்தப்பட வேண்டும்.
20 வீத வெளிப்படையான வரியானது வருமானத்தின் அளவுக்காக பெறப்படுகின்ற வரியாகும். அண்மைக்கால அரசாங்கங்கள் எதுவும் இந்த கணிப்பு முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி இந்த முறையை மாற்றும்.
தற்போதைய அரசாங்கம் தேவைக்கு அதிகமாகவும் வரியை அறவிடுகின்றது. சம்பாதிக்கின்ற போது அளவிடப்படுகின்ற வரி தற்பொழுது அதிகரித்துக் காணப்படுகின்றது.
தன்னிச்சையாக இந்த அரசாங்கம் வரியை அதிகரித்து விட்டு, தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டது போல வரியை குறைப்போம் என்று கூறுகின்றது.
தேர்தல் காலத்தில் கூறுகின்ற இந்த விடயங்கள் தேர்தல் உருட்டுக்களாகும். போட்டியின் போது வர்த்தமானிகளும் அமைச்சரவை பத்திரங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஜனவரியில் செய்ய வேண்டிய வேலைகளை தற்போது செய்து பலன் இல்லை .
தற்பொழுது 6 - 36 வீதம் வரை வரி அறவிடப்பட்டாலும், அதனை 1- 24 வீதம் வரை குறைப்போம். இதன் போது நாங்கள் பொறுப்புடன் செயல்படுவோம்.
அரசாங்கத்தின் வருமானம் உள்நாட்டு உற்பத்தியில் ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் 21 வீதமாகவும் 2019இல் 12 வீதமாகவும் காணப்பட்டது.
கோட்டாபய ராஜபக்சவின் வரிச் சலுகை காரணமாக 8 வீதம் வரை அது குறைவடைந்தது. எனவே ரேட்டிங் நிறுவனம் எமது நாட்டை கீழ் மட்டத்தில் வைத்திருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் நடைமுறைக்கு பொருத்தமான வகையில் வரி சுமையை குறைப்போம் .
பராட்டே சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினாலும், போதுமானதாக இல்லை
2016க்கு பின்னர் அரச ஊழியர்களாக இணைத்துக்கொண்டவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. அதனை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.
அத்தோடு வீழ்ச்சி அடைந்திருக்கிற சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி துறையாளர்கள் மீண்டு வருவதற்கான சந்தர்ப்பத்திற்காகவே பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரினோம்.
இங்கு அவர்கள் மீண்டு வருவதற்கான செயன்முறை ஒன்றையும் வழங்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான ஒரு திட்டத்தை வழங்கவில்லை. எனவே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அவர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவு மூலதனத்தை வழங்குவோம்.
பொருளாதாரச் சுருக்கத்தை அரசாங்கம் நம்பினாலும் நாம் பொருளாதார விரிவாக்கத்தை நம்புகின்றோம்
பொருளாதார விரிவாக்கத்தின் மீது ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை கொண்டிருந்தாலும், அரசாங்கம் பொருளாதாரச் சுருக்கத்தையே நம்புகின்றது. பொருளாதாரத்தை சுருக்குவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வினை காண முடியாது.
இது வங்கி கட்டமைப்புக்கும் பாரிய அழுத்தமாக இருக்கும். பொருளாதாரச் சுருக்கத்தினால் மக்களுடைய வாழ்க்கைத் தரமும் சுருங்கிப் போகின்றது. எனவே பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
அதன் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைந்து வருமானத்திற்கான வழிகள் உருவாகின்ற போது புதிய தொழில் முனைவோர்களும் உருவாகின்றனர்.
இந்த நேர்மறையான செயற்பாடானது வங்கி கட்டமைப்பிற்கும் தாக்கம் செலுத்துகின்றது. எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை திட்டத்தின் ஊடாக வங்கிக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, விரைவுச் சேவைகள் வழங்கப்பட்டு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM