வரிச்சுமைகளில் இருந்து அரச ஊழியர்களை மீட்டு அவர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் - சஜித் பிரேமதாச

02 Sep, 2024 | 05:33 PM
image

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24%ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவை, கொடுப்பனவை 25,000 ரூபாய் வரை அதிகரித்து, அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். அரச ஊழியர்களையும் மத்திய வகுப்பினரையும் அரசாங்கத்தின் வரிச்சுமையிலிருந்து  விடுவித்து  6- 36% வரையாக காணப்படுகின்ற வரி சூத்திரத்தை 1 - 24% வரை குறைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள் வெற்றிப் பேரணித் தொடரின் 30ஆவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில்  திங்கட்கிழமை (02) முல்லைத்தீவு நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கு வழங்கப்படுகின்ற 15% வட்டியை தொடர்ந்து வழங்குவதோடு, ஓய்வூதிய கொடுப்பனவையும் சரியாக வழங்க நடவடிக்கை எடுப்போம். 

பாதுகாப்புத்துறையில் உள்ளவர்களுக்கான கொடுப்பனவுகளையும், பதவி உயர்வுகளையும் சரியான முறையில் வழங்குவோம். பொலிஸாருக்கு தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 3 மாதத்துக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் விரிவுபடுத்துவதோடு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பிரபஞ்சம், மூச்சு போன்ற செயற்றிட்டங்களின் ஊடாக ஒரு பில்லியன் பெறுமதியான சேவைகளை கல்விக்கும் சுகாதாரத்துக்கும் செய்திருக்கிறோம். 

தான் சொல்வதைச் செய்கின்ற, செய்வதைச் சொல்கின்ற நபர் என்ற அடிப்படையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இந்த மண்ணின் நிதர்சனமாக அதனை உண்மைப்படுத்துவேன்.

பெண் தலைமைத்துவம் உள்ள குடும்பங்களுக்கு விசேட வாழ்வாதார  செயற்றிட்டத்தை ஆரம்பிப்போம். அங்கவீனர்களுக்காக விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதன் ஊடாக அவர்களை பொருளாதாரத்தின் பங்காளர்களாக இணைத்துக்கொள்வதற்கான பாரிய செயற்றிட்டத்தையும் முன்னெடுப்போம்.

கோட்டாபய, ரணில் விக்ரமசிங்க ஆகிய ஜனாதிபதிகளுடைய காலத்தில் நிறுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதோடு, காணி இல்லாதவர்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்கி தீர்வு பெற்றுத் தருவோம்.

அத்தோடு நாட்டின் பல பகுதிகளில் காணிப்பிரச்சினை காணப்படுகின்றது. காணி இல்லாதவர்களும், காணி கிடைக்கப் பெறாதவர்களும், காணி இருந்தும் உறுதிப் பத்திரம் இல்லாதவர்களும் இருக்கின்றார்கள். இதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை தாபித்து, அதன் ஊடாக காணி இருந்தும் உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை ஜனாதிபதி உட்பட அனைவரும் முன்வைத்திருக்கிறார்கள். திட்டங்களை முன்வைப்பதற்கு பதிலாக சேவைகளை செய்வதையே ஜனாதிபதி செய்ய வேண்டும். இந்த பதில் ஜனாதிபதி அவருடைய பதவிக் காலத்தில் எந்த ஒரு தொழிற்சாலையும் உருவாக்கவில்லை. அதிகாரத்தை கோருகின்ற மாற்று நபர்களும் தொழிற்சாலைகளை உருவாக்குவதை விட அவற்றை தீயிட்டு கொளுத்துவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்ற, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டின் ஊடாக இந்த செயற்றிட்டங்களுக்கு அதிகளவான உதவிகளை பெற்றுக்கொண்டு, பெருந்தொகையான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக்கொண்ட யுகமாக இந்த யுகத்தை மாற்றுவோம். அதனூடாக நாட்டுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவோம்.

மீன்பிடித் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகங்கள் நங்கூரமிடக்கூடிய நிலப் பிரதேசங்கள் என்பனவற்றை சர்வதேச நிவாரணங்களை மையப்படுத்தி விருத்தியடையச் செய்வதோடு, மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். அத்தோடு ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தித் துறையின் ஊடாக மீன்பிடித் தொழிலை உயர்ந்த மட்டத்துக்கு அபிவிருத்தி அடையச் செய்யவும் நடவடிக்கை எடுப்போம்.

சூரிய சக்தி மற்றும் நிலையான எரிசக்தி கட்டமைப்பை ஏற்படுத்தி, ஸ்தீரமான எரிசக்தி கட்டமைப்புக்கு முன்னுரிமை வழங்கி, தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதற்காக மாங்குளம் பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையமொன்றை உருவாக்கி, அதனூடாக வீட்டுப் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியும். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர் யுவதிகளுக்காக தொழிற்சாலைகளை உருவாக்குவதோடு, அதனூடாக நேரடியாக வெளிநாட்டு முதலீட்டையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

விவசாயத்தையும் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த வேண்டும். வனவிலங்கு பிரதேசங்களை வளமாக மாற்றி, வன ஜீவராசிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறைக்கான புதிய செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தி, சுற்றுலாத்துறை மேம்படுவதற்கு, சுற்றுலா நகரங்களை உருவாக்குவோம்.

ஊழலுக்கு எதிரான செயற்றிட்டங்களை சரியான முறையில் நிறைவேற்றி, நாட்டில் இருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்கள், பணம் என்பன மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்படும். நாட்டுக்கான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57