(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் கடமையை ஜனாதிபதிக்கு செய்ய முடியாது என்றால், அவர் அந்த பதவியில் இருந்து விலகி, பிரதமரை பதில் ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுக்வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் பிரதமரின் விசேட உரைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவைக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பு தொடர்பில் சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பிரகாரமே தற்போது பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் தீர்பொன்றை வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நீங்கள் தற்போது தெரிவிக்கின்றீர்கள்
2018இல் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படவும் அன்று இருந்த அமைச்சரவைக்கு தடை உத்தரவு வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை ஏற்று்கொள்வதில்லை என நாங்கள் பாராளுமன்ற்துக்குள் வந்து தெரிவிக்கவில்லை. அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கவில்லை. அதன் பின்னர் மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். அன்று நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரபால சிறிசேன அந்த தீர்ப்பை மறுக்கவில்லை. தேவை என்றால் அவருக்கு அவ்வாறு செய்யவும் முடிந்தது.
அதனால் தற்போது இந்த பிரச்சினை அரசியலமைப்பில் முரண்பாடான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது.அதன் பிரகாரம் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கிறது. பதில் நியமனங்கள் வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு இல்லை. ஜனாதிபதி இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே பதில் சட்டமா அதிபரையும் நியமித்திருந்தார்.
அதனால் ஜனாதிபதி தனது கடமையை செய்ய வேண்டும் என சபாநாயகராகிய நீங்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி வீட்டுக்கு சென்ற பின்னர் ஒரு காலத்தில் அரசியலமைப்பை மீறிய குற்றத்துக்காக வழக்கு தொடுக்கப்படலாம். இதனை நினைவில் வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
அத்துடன் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க தற்போதுள்ள பொலிஸ்மா அதிபரின் பதவி வெற்றிடமாகவில்லை என அமைச்சர் சுசில் பிரேமசந்திர தெரிவித்தார். அப்படியானால், பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித்த ஜயசுத்தரவை கட்டாய விடுமுறையில் அனுப்பினோம்.. அப்போதும் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை. அப்போது சீ,டீ. விக்ரமநாயக்கவை பதில் பொலிஸ்மா அதிபராக நியமித்தது யார்.? அவர் பதில் பொலிஸ்மா அதிபராக கடமையை செய்துகொண்டு சென்றார். அதனால் ஜனாதிபதிக்கு தனது பொறுப்பை செய்ய முடியாது என்றால், அவர் அந்த பதவியில் இருந்து விலகி, பிரதமருக்கு அந்த அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM