(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (19) நிறைவடைந்த 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 9 பேர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி பெரும் பாராட்டைப் பெற்றனர்.
இருபாலாருக்கும் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட போட்களைக் கொண்ட தேசிய விளையாட்டுப் போட்டியின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகள் சுகததாச விளையாட்டரங்கில் 3 தினங்களாக நடைபெற்றன.
மெய்வல்லுநர் போட்டிகளில் சப்ரகமுவ மாகாண வீரர் வை.சி.எம். யோதசிங்க அதிசிறந்த ஆண் மெய்வல்லுநாகவும் மத்திய மாகாண வீராங்கனையும் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளவருமான தருஷி கருணாரட்ன அதிசிறந்த பெண் மெய்வல்லுநராகவும் தெரிவாகினர்.
இவ் வருட தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மேல் மாகாணம் 106 தங்கம், 82 வெள்ளி, 90 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சம்பியனானது.
மத்திய மாகாணம் 45 தங்கம், 47 வெள்ளி, 64 வெண்கலப் பதக்கங்களுடன் 2ஆம் இடத்தையும் தென் மாகாணம் 37 தங்கம், 42 வெள்ளி, 47 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன.
வடமேல் மாகாணம் (37 - 25 - 42), வடமத்திய மாகாணம் (16 - 21 - 37), சப்ரகமுவ மாகாணம் (12 - 23 - 47), ஊவா மாகாணம் (9 - 14 - 26), கிழக்கு மாகாணம் (9 - 1 - 11), வடமாகாணம் (5 - 8 - 7) ஆகியன முறையே அடுத்த 6 இடங்களைப் பெற்றன.
ஆண்களுக்கான 100 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியை 10.27 செக்கன்களில் ஓடிமுடித்து போட்டி சாதனையை ஏற்படுத்தியதன் மூலம் யோதசிங்க 1115 சர்வதேச மெய்வல்லுநர் சங்க தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று அதிசிறந்த ஆண் மெய்வல்லுநரானார்.
தருஷி கருணாரட்ன 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.69 செக்கன்களில் ஓடி முடித்து 1000 சர்வதேச மெய்வல்லுநர் சங்க தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று அதிசிறந்த பெண் மெய்வல்லுநரானார்.
மூன்று தினங்கள் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் 9 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.
போட்டியின் ஆரம்ப நாளன்று பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.51 மீற்றர் உயரத்தைத் தாவிய வட மாகாண வீராங்கனை நேசராசா டக்சிதா புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீரர் ஏ. புவிதரன் (5.11 மீற்றர்) புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி தங்கம் வென்றார்.
ஏனைய போட்டி சாதனைகள்
பெண்கள்
மெத்மி ரசாரா விஜேசூரிய - 2 சாதனைகள் (கிழக்கு மாகாணம்) 10000 மீற்றர் - 34:35.92 நி., 5000 மீற்றர் - 16:41.00 நி.
வீ. லக்மாலி - (வடமத்திய மாகாணம்) தட்டெறிதல் - 45.50 மீ.
ஆண்கள்
காலிங்க குமாரகே (மேல் மாகாணம்) 200 மீற்றர் - 20.71 செக்.
வை.சி.எம். யோதசிங்க (சப்ரகமுவ மாகாணம்) 100 மீற்றர் திறன்காண் போட்டி - 10.27 செக்.
டி. ரணதுங்க (சப்ரகமுவ மாகாணம்) 110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - 13.99 செக்.
இந்த சாதனைகளைவிட 20 வயதுக்குட்பட்ட தேசிய சாதனை ஒன்றை அயோமல் அக்கலன்க முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.
400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 51.29 செக்கன்களில் நிறைவுசெய்தே அவர் 20 வயதுக்குட்பட்ட புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.
இது இவ்வாறிருக்க, தேசிய விளையாட்டுப் போட்டிக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தினர்.
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 14:42.04 நிமிடங்களில் நிறைவுசெய்த தலவாக்கொல்லை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாண வீரர் வி. வக்சன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
போட்டியின் கடைசி நாளன்றும் வக்சன் மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் (3:52.12 நி.) அவர் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆர். எம். நிப்ராஸ் ((3:52.80 நி.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த எஸ். நிருஷா (3.30 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இரண்டாம் நாளன்று ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. அரவிந்தன் (1:51.99 நி.) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கிழக்கு மாகாண வீரர் எம்.ஐ.எம். அசான் (7.52 மீ.) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
வட மாகாண வீரர் எஸ். மிதுன்ராஜ், எறிதல் போட்டிகள் இரண்டில் பதக்கங்கள் வென்றெடுத்தார். ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் (45.23 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதல் போட்டியில் (14.72 மீ.) மற்றொரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 31:30.35 நிமிடங்களில் நிறைவு செய்த அட்டன் வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாண வீரர் கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். அவர் 17 செக்கன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM