கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்கவிருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம், 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்படவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதனூடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
20 இலட்சம் முழுமையான காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான 'உறுமய' தேசிய செயற்றிட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி இன்று (05) முற்பகல் குருநாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சிலர் சோசலிசம் பற்றி கதைத்தாலும், மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்குவதே உண்மையான சோசலிசமாகும் என்றும் தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்ட அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, “உறுமய” காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் மேலும் 20 இலட்சம் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தலைவர்கள் எவரும் முன்வராத நிலையிலேயே தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு இன்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டை புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக குருணாகல் மாவட்டம் புதிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விரிவான அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
"குருணாகல் மாவட்டத்தில் நாட்டுக்கு சோறு தரும் விவசாயிகள் வாழும் பகுதியாகும். ஆனால் இன்னும் அவர்களுக்கான நில உரிமை கிடைக்கவில்லை. இன்று இந்நாட்டில் வாழும் இலட்சக்கணக்கானோர் சட்ட ரீதியான காணி உறுதிகள் இன்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு உரிமையை வழங்குவதற்காகவே உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம்.
மிகவும் கடினமான காலகட்டத்திலேயே என்னால் ஆட்சியமைக்க நேரிட்டது. ஆட்சியைப் பொறுப்பேற்க தலைவர்கள் எவரும் அப்போது முன்வரவில்லை. ஆனாலும் நான் ஏற்றுக்கொண்டேன். பல கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஆட்சியமைத்தேன். தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்திருக்கிறோம்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இன்று இந்தப் பகுதி எம்.பி.க்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தமது வீடுகள் தீயிடப்பட்டதை மறந்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்ய முன்வந்திருக்கிறார்கள்.
இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த எமக்கு 04 வருட கால அவகாசம் உள்ளது.
மேலும், சுமார் 06 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்தவேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டிவிடப்பட்டுள்ளது. அதனால் 05 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு எஞ்சும்.
தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன்படி, சுமார் 03 பில்லியன் டொலர்கள் குறைவடையும். எனவே நாம் செலுத்தவேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 08 பில்லியன் டொலர்கள் வெட்டிவிடப்படும்.
மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 02 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா, இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 08 பில்லியன் டொலர்களை சேமித்துள்ளோம்.
நான் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், இந்தியா எமக்கு மூன்றரை பில்லியன் டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்கியது.
மேலும் பங்களாதேஷும் 200 மில்லியன் டொலர்களை வழங்கியது. பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், நாம் 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளோம்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. வற் வரியை அதிகரிப்பது எளிதானது அல்ல. ஆனால் பொருளாதாரத்தை சீரமைக்க அதைச் செய்ய வேண்டியிருந்தது.
சில தலைவர்கள் மக்களை வீதிக்கு வந்து வீடுகளை எரிக்கச் சொன்னார்கள். அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது என்றார்கள். விவசாயிகளை மீண்டும் கொழும்புக்கு வருமாறு கூறினர். விவசாயத்துக்கு தேவையான எரிபொருள் இல்லாமல் கொழும்புக்கு வர முடியாது. மக்களுக்கு எரிபொருள் மற்றும் உரங்களை வழங்கினோம். அப்போதும் கூட விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளுக்கு கொழும்புக்கு வருமாறு கூறினர்.
விவசாயிகள் 2022-2023 வரையில் பெற்றுத்தந்த அறுவடையின் காரணமாகவே இந்த நாட்டின் உற்பத்தி அதிகரித்தது. அதே நேரத்தில், சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. இவற்றுக்கு மத்தியில் 08 பில்லியன் டொலர் நிவாரணத்தையும் பெற்றுக்கொண்டு கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியை உருவாக்கியுள்ளோம். பொருளாதார வீழ்ச்சி சாதாரண மக்களையே பெருளவில் பாதிக்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தை ஒரு தரப்பு மாத்திரம் அனுபவிக்கிறது.
அதனாலேயே உறுமய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கி சாதாரண மக்களுக்கும் அதன் பலன்களை பெற்றுக்கொடுக்க விருப்பினோம். பல தலைமுறைகளாக தாம் வாழ்ந்த காணியின் உரிமை இன்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சாதனையாகும்.
மற்றவர்கள் சோசலிசம் பற்றி பேசுகிறார்கள். ஆனால், இதுதான் உண்மையான சோசலிசம். இதன் மூலம் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது. உலகில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இத்திட்டத்தை செயற்படுத்தியுள்ளன. ஆனால், இரு நாடுகளிலும் குறைந்த விலைக்கு காணி வழங்கப்பட்டன. ஆனால், நாங்கள் இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த செயற்றிட்டத்தின் மூலம் இந்நாட்டில் காணி உரிமையாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது.
அத்துடன் சமூர்த்தி செயற்றிட்டத்தின் நன்மைகளை மூன்று மடங்கினால் உயர்த்துவதற்காக அஸ்வசும திட்டத்தை செயற்படுத்தினோம். வங்குரோத்து அடைந்த நாட்டிலேயே இந்த திட்டங்களை செயல்படுத்தினோம். அரசாங்க ஊழியர்களுக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.
எதிர்வரும் வருடங்களிலும் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தலாம். இத்தோடு தனியார் துறையிலும் சம்பள உயர்வு கிட்டியது. சுற்றுலா துறையின் வருமானம் அதிகரித்தது. இன்று, நாட்டில் ஒரு நவீன சுற்றுலா வணிகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.
கடந்த பொசன் போயாவின்போது நாடு முழுவதும் ஏராளமான தன்சல்கள் நடத்தப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. இன்று உங்களது கடின உழைப்பினால் அறுவடை செய்யப்பட்டு, இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்சல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுவே நமது பலமாகும். அதே சமயத்தில் நாம் நாட்டு மக்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்குகிறோம். நாடும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இன்று இந்த குருநாகல் மாவட்டம் துரிதமாக அபிவிருத்தியடைந்து வருகிறது. கம்பஹா மற்றும் கொழும்புக்கு அடுத்தபடியாக குருணாகல் மாவட்டத்தில் அதிகளவான மக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தை திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும்.
எனவே, பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயமொன்றை உருவாக்குவதற்காக 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இரணவில சுற்றுலா வலயத்துடன் இணைக்க எதிர்பார்த்திருக்கிறோம். அப்போது இந்த பிங்கிரிய, மாதம்பே பகுதிகள் பாரிய முன்னேற்றம் அடையும்.
மேலும், குளியாபிட்டியவில் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது.
மேலும் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் விரிவான திட்டமொன்று குருணாகல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது உதவித்தொகை கிடைக்கவுள்ளதால், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய வீதி நிர்மாண பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும் இந்த மாகாணத்துக்கு புதிய பல்கலைக்கழகம் ஒன்றும் கிடைக்கும். இதனால் அடுத்த சில வருடங்களில் குருணாகல் பெரும் அபிவிருத்தி அடையும்" எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தெரிவிக்கையில்,
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய செயற்திட்டமென உறுமய செயற்றிட்டத்தை குறிப்பிடலாம்.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்நாட்டில் பலர் காணி அனுமதிப் பத்திரங்களை மட்டுமே கொண்டுள்ளனர். வெவ்வேறு பெயர்களில் அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டாலும், அந்த காணிகளுக்கு நிரந்தர உரிமை கிடைக்கவில்லை. அரசாங்க அதிகாரிகள் தலையிட்டு மக்களின் காணி பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. இன்று மக்களின் காணி பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
வடமேல் மாகாண மக்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து வைத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.
வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் கூறுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் உறுமய வேலைத்திட்டம் இன்று வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். மக்களுக்கு சட்டப்பூர்வ காணி உரிமையை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நாட்டில் பலருக்கு காணி அனுமதி பத்திரங்கள் மட்டுமே உள்ளன. அந்த நிலங்களின் உரிமையை எந்த நேரத்திலும் அரசாங்கம் கையகப்படுத்தலாம். அனுமதிப் பத்திரம் உள்ள காணிகளுக்கு பெறுமதி இருக்காது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு இருபது இலட்சம் இலவச பத்திரங்களை வழங்கும் செயற்றிட்டத்தை தற்போதைய ஜனாதிபதி மட்டுமே நடைமுறைப்படுத்தினார். உறுமய செயற்றிட்டம் எதிர்காலத்துக்கான முதலீடு என்றே கூற வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவான விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நம் நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. குறுகிய காலத்தில் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.
மக்களுக்கு காணி உறுதி கிடைப்பதை சில அரசியல்வாதிகள் விரும்பவில்லை. எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டும். இந்த நாட்டை சுவாசிக்க வைத்த தலைவர் என்பதை நாம் மறந்துவிட முடியாது. நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக அவரது தலைமைத்துவம் தொடர வேண்டும் என்றார்.
இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, டி. பி. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, அசங்க நவரத்ன, மஞ்சுள திஸாநாயக்க, சுமித் உடுகும்புர, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்க, வடமேல் மாகாண சபையின் தலைவர் டிக்கிரி அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சந்ரா ஹேரத், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மகேந்திர அபேவர்தன, அரச அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM