இனவாதக் கொந்தளிப்பினால் அழிந்து கொண்டிருக்கும் இலங்கையை மீட்டெடுப்பதற்கு சமாதானமும் நீதியான முறையில் பல்லின சமத்துவமும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் செயலாற்றிய மூத்த அரசியல் தலைவர் இரா. சம்பந்தனுடைய மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும்.
இந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சூழ்நிலையில் மிகக் கடினமானதாகும். சம்பந்தனுடைய மறைவுநாட்டில் அமைதியையும் நீதியான தீர்வையும் எட்ட விரும்பும் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். இந்த இழப்பை ஆழமாகச் சமத்துவக் கட்சி உணர்ந்து கொண்டு, மறைந்த தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு தன்னுடைய அஞ்சலியை செலுத்துகிறது என அந்தக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் மறைவுக்கு அவர் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் நீதியான தீர்வொன்றை எட்ட வேண்டும் எனத் தன்னுடைய இறுதி மூச்சுவரையிலும் உறுதியாக இருந்தவர் சம்பந்தன். இதற்காக அவர் தன்னுடைய கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள், விமர்சனங்கள், சர்ச்சைகளை எதிர்கொண்டிருந்தார். எனிலும் சமாதானத்திலும் ஐக்கியத்திலும் அமைதித்தீர்விலும் கொண்டிருந்த ஆர்வத்தைக் குறைத்ததில்லை. இத்தகைய பெறுமானத்தைக் கொண்ட தலைவரின் இழப்பை சமத்துவக் கட்சி ஆழமாக உணர்ந்து கொண்டு, சம்பந்தனுக்கு தன்னுடைய அஞ்சலியை செலுத்துகிறது.
இலங்கைத் தீவில் அமைதியை வலியுறுத்தித் தொடர்ந்து செயற்பட்ட மூத்த அரசியல் தலைவர் இரா. சம்பந்தன். ஒடுக்கப்பட்ட இனமொன்றின் அரசியல் தலைமையை,அதனுடைய நீண்ட விடுதலை அரசியற் போராட்டத்தின், போரின் பின் ஏற்றுச் செயற்படுவது எளிதானதல்ல. அதிலும் போரில் தோற்கடிக்கப்பட்ட தரப்பாகத் தமிழர்கள் இருந்த நிலையில், அதற்குத் தலைமைப்பொறுப்பை வகிக்கும் வரலாற்றுச் சூழல் சம்மந்தன் அவர்களுக்கு அமைந்தது. இது மிகச் சிக்கலான ஒரு நிலையாகும். இந்த நிலையில் தன்னால் முடிந்த அளவுக்கு விட்டுக் கொடுப்புகளைச் செய்து சிங்களத் தரப்பினரோடு கைகோர்த்து அமைதித் தீர்வை எட்டுவதற்கு முயற்சித்தார். ஆனாலும் அவருடைய முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. இதன்மூலம் சம்மந்தனோ அவருடைய வழிமுறையோ ஒருபோதும் தோற்கடிக்கப்படவில்லை. வரலாற்றில் அதற்கான இடம் நிச்சயமாக இருந்தே தீரும். அமைதிக்கு எதிராகச் சிந்திப்போரும் செயற்படுவோருமே வரலாற்றிற் தோற்கடிக்கப்பட்டோராக இருப்பர்.
அறுபது ஆண்டுக்கும் மேலான சம்பந்தனுடைய அரசியற் பயணம் நெருக்கடிகள், சர்ச்சைகள், எதிர்ப்புகளின் மத்தியிலேயே நிகழ்ந்தது. அவருடைய அரசியல் நிலைப்பாட்டுக்காகச் சிங்கள இனவாதிகளினாலும் தீவிரத் தமிழ்த்தேசியவாதிகளாலும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். இதொரு விநோதமான நிலையாகும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும்போது இணக்கப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். இனவாதம் என்பது இணக்கப்பாட்டுக்கு எதிரானது. என்பதால் இரண்டு தீவிரத் தேசியவாதத்துக்கும் (இனவாதத்துக்கு) எதிராக நின்று தாக்குப் பிடிக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பத்தத்தை ஏற்க வேண்டிய நிலை சம்மந்தன் அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த நிர்ப்பந்தத்தை அவர் தன்னுடைய முதிய வயதிலும் ஏற்று நின்றதனாலேயே அவருக்கு ஜனநாயக சக்திகளிடத்திலும் முற்போக்காளரிடத்திலும் மதிப்பும் ஆதரவும் கிடைத்தது. இதுவே அவர் சர்வதேச சமூகத்தின் மதிப்பையும் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் காரணமாக அமைந்திருந்தது. மாறிவரும் சர்வதேச சூழலையும் உள்நாட்டு நிலவரங்களையும் நன்றாக உணர்ந்தறிந்திருந்தவர் சம்பந்தன். அதன்வழியே தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுக்க முயன்றவர்.
வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து அவர் ஒருபோதும் விலகவோ தளரவோ இல்லை. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தினருக்கும் சமனிலையான அதிகாரமும் உரிமையும் கிடைக்கக்கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். இதனால் அவர் இலங்கைத்தீவின் தலைவர்களில் ஒருவராக இனமத பேதங்கடந்து அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருடைய இந்த வழிமுறை தொடரப்பட வேண்டும். அதுவே அவருக்கு இந்த நாட்டு மக்களும் குறிப்பாகத் தமிழ்ச்சமூகமும் செலுத்தும் மதிப்பார்ந்த மரியாதையாக இருக்கும்.
சம்பந்தன் அவர்களை இழந்து நிற்கும் மக்களுக்கும் அவருடைய சக அரசியல் பயணிகளுக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்கள் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM