சமரி, இனோஷி பந்துவீச்சிலும் விஷ்மி, ஹர்ஷித்தா துடுப்பாட்டத்திலும் பிரகாசிப்பு; மே. தீவுகளை வென்றது இலங்கை

24 Jun, 2024 | 04:16 PM
image

(நெவில் அன்தனி)

ஹம்பாந்தோட்டை, சூரியவவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையாக  வெற்றியீட்டிய இலங்கை, இப்போது ரி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

அணித் தலைவி சமரி அத்தப்பத்து, இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோர் பந்துவீச்சிலும் விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகியோர் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து இலங்கை மகளிர் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட  மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி ஹேலி மெத்யூஸ் (30), ஆலியா அலின் (26), கியானா ஜோசப் (20) ஆகிய மூவரே ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடினர்.

மிகத் துல்லியமாக பந்துவீசிய சமரி அத்தப்பத்து 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

இனோஷி ப்ரியதர்ஷனியும் திறமையாக பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் தலா 35 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

நிலக்ஷிகா சில்வா 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அஃபி ப்ளெச்சர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்