பயமறியா பிரம்மை - விமர்சனம்

22 Jun, 2024 | 07:09 PM
image

தயாரிப்பு : சிக்ஸ்டிநயன் எம் எம் பிலிம்

நடிகர்கள் : ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் பாபு, ஜாக் ராபின், ஜான் விஜய், வினோத் சாகர், திவ்யா கணேஷ் மற்றும் பலர்.

இயக்கம் : ராகுல் கபாலி

மதிப்பீடு : 2.5 / 5

ர்வதேச தரத்திலான ஓவிய படைப்புகளை உருவாக்கும் இந்திய ஓவிய கலைஞர் ராகுல் கபாலி- டிஜிட்டலில் செதுக்கி இருக்கும் ஓவியம் 'பயமறியா பிரம்மை'. இது ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தோராயமாக நூறு கொலைகளை செய்து சிறை தண்டனை பெற்று வரும் கொலை குற்றவாளி ஜெகதீஷ்( ஜேடி)  - தன்னுடைய எழுத்துக்களால் கோடி கணக்கிலான ரசிகர்களை சம்பாதித்த இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன்( வினோத் சாகர்) - இருவரும் சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள். அவர்களின் உரையாடல் எப்படி இருந்தது? எழுத்தாளரின் கேள்விகளுக்கு கொலை குற்றவாளியின் பதில் என்னவாக இருந்தது? இதை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் இயக்குநர் அடிப்படையில் ஓவிய கலைஞர் என்பதால்... ஒரு எழுத்தாளருக்கும் கொலை குற்றவாளிக்கும் இடையிலான உரையாடலை... காட்சிகளாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்வதில் சர்வதேச தரத்திலான படைப்பிற்குரிய முயற்சி தெரிகிறது.  இதற்காக இயக்குநரை பாராட்டலாம்.

ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தின் இளமை காலம் முதல் சிறைக்கு வரும் காலகட்டம் வரையிலான திரை தோற்றத்திற்காக வெவ்வேறு நடிகர்களை பயன்படுத்தியிருப்பது சுவாரசியமாக இருந்தாலும்...‌ பார்வையாளர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.  இது தொடர்பான அறிவிப்பை இயக்குநர் படத்தின் தொடக்கத்திலேயே 'கவனம் அவசியம்' என தெரிவித்து விடுவதால் இந்தத் திரைப்படத்தை முதல் காட்சியிலிருந்து பார்க்கத் தவறினால் கதை புரியாமல் போகக்கூடும் வாய்ப்பு இருக்கிறது.

ஜெகதீஷ் எனும் கதாபாத்திரத்தின் வாழ்க்கை குறிப்பைச் சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்... ஒரு ஓவிய கலைஞனாக வர விருப்பம் கொண்ட இளைஞன் - வன்முறை மீது அதிக விருப்பம் கொண்ட ஒருவனால் காரணமே இல்லாமல் தாக்கப்படுகிறான். அவனுக்கு இயல்பாகவே மன பதட்டம் ஏற்பட்டால் வன்முறையை நாடுபவன். அதனால் தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட.. பதற்றத்தை ஏற்படுத்திய மனிதர்களை சட்டத்திற்கு விரோதமான வன்முறையால் தாக்குகிறான். இதனால் சிறைக்கு செல்கிறான்.

இந்த கை அகல கதையை வைத்துக் கொண்டு இயக்குநர் சாமர்த்தியமான திரைக் கதையால் ரசிகர்களை வசப்படுத்த முயற்சிக்கிறார். இவருக்கு ஒளிப்பதிவாளரும், பின்னணி இசையமைப்பாளரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

இயல்பாகவே ஒவ்வொரு படைப்பாளிக்குள்ளும் சமன்படுத்தப்படாத வக்கிர குணங்களும், மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் சட்ட விரோத குணங்களும் அழுத்தமாக மனதில் இருக்கும் என்பார்கள். அந்த வகையில் சமூக நல்லிணக்கத்திற்கு பயன்படாத வகையில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அதே தருணத்தில் விருது பெற்ற எழுத்தாளரின் கதாபாத்திரத்தின் ஊடாக... சிறையில் இருக்கும் குற்றவாளிக்கு, 'கலையைக் கடந்து மனிதாபிமானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என அறிவுரை வழங்கப்பட்டிருப்பது...  இப்படைப்பின் வெற்றியாக அவதானிக்கலாம்.

கதையை தெரிவு செய்திருப்பதிலும், அதற்காக காட்சிப்படுத்துதலில் புதிதாக முயற்சி செய்திருப்பதிலும் இந்த புதிய குழுவினரை பாராட்டலாம். ஆனாலும் வெகுஜன மற்றும் பாமர மக்களுக்கு இந்த படைப்பு எளிமையானதாக இல்லாததற்காக.. இதற்கான வரவேற்பு குறைவுதான்.

நடிகர்களில் குரு சோமசுந்தரம் மற்றும் ஜேடி ஆகியோர்கள் மட்டுமே கதையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வேறு நடிகர்கள் அனைவரும் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

சிறைச்சாலையில் கபிலனும், ஜெகதீசும் சந்தித்துக் கொள்ளும் இறுதிக்கட்ட நிகழ்வு செயற்கையாய் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது... இயக்குநரின் பலவீனமான கற்பனையை தான் தான் உணர்த்துகிறது.

பயமறியா பிரம்மை - கற்றுக்கொள்ளா உவமை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்