(நெவில் அன்தனி)
நடப்பு சம்பியன் இங்கிலாந்தும் வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகளும் சென் லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை வியாழக்கிழமை (20) காலை (இலங்கை நேரப்படி) நடைபெறவுள்ள குழு 2க்கான ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் மோதவுள்ளன.
தலா இரண்டு தடவைகள் சம்பியன்களானதும் பலசாலிகளுமான இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இப் போட்டி இப்போதைக்கு இந்த வருட உலகக் கிண்ணத்தில் மிகச் சிறந்த போட்டியாக அமையவுள்ளதுடன் கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் பி குழுவில் இடம்பெற்ற இங்கிலாந்து தட்டுத்தடுமாறி சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
ஸ்கொட்லாந்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றுக்கு செல்லுமா என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.
எனினும் பலம் குன்றிய ஓமானையும் நமிபியாவையும் நையப்புடைத்து வெற்றியீட்டி சுப்பர் 8 சுற்று தகுதியை இங்கலாந்து உறுதிசெய்துகொண்டது.
ஒருவேளை ஸ்கொட்லாந்திடம் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தால் இங்கிலாந்து இந்நேரம் வெளியேறியிருக்கும்.
மறுபுறத்தில் சி குழுவில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் தனது நான்கு போட்டிகளில் பப்புவா நியூ கினி, உகண்டா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
இந்த இரண்டு அணிகளும் சர்வதேச ரி20 அரங்கில் சந்தித்துக்கொண்ட 29 சந்தர்ப்பங்களில் 17 - 12 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை வகிக்கிறது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் 5 - 1 என்ற ஆட்;டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 2016இல் குழுநிலையிலும் இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டிருந்தது.
இந்தப் போட்டி முடிவுகளின் அடிப்படையிலும் தற்போதைய ரி20 உலகக் கிண்ணத்தில் இரண்டு அணிகளின் பெறுபேறுகளின் அடிப்படையிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று கூறத் தோன்றுகிறது.
அத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த நாட்டில் விளையாடுவதால் அதன் வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
இரண்டு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருக்கின்றபோதிலும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களே சிறப்பாக விளையாடியுள்ளனர்.
மழையினால் கழுவப்பட்ட போட்டி உட்பட 4 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து சார்பாக துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு யாரும் பிரகாசிக்கவில்லை. ஆனால், பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ராஷித் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்களை வீழ்த்தி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
மெற்கிந்தியத் தீவுகள் அணியில் நிக்கலஸ் பூரன் (164 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்திலும், அக்கீல் ஹொசெய்ன் (9 விக்கெட்கள்), அல்ஸாரி ஜோசப் (9), குடாகேஷ் மோட்டி (7) ஆகியோர் பந்துவீச்சிலும திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அணிகள்
இங்கிலாந்து: பில் சோல்ட், ஜொஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பெயாஸ்டோவ், ஹெரி புறூக், மொயீன் அலி, வில் ஜெக்ஸ், சாம் கரன், ஜொவ்ரா ஆச்சர், மார்க் வூட் அல்லது கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், ரீஸ் டொப்லே.
மேற்கிந்தியத் தீவுகள்: ப்றெண்டன் கிங், ஜோன்சன் சார்ள்ஸ், நிக்கலஸ் பூரன், ஷாய் ஹோப் அல்லது ரொஸ்டன் சேஸ், ரோவ்மன் பவல் (தலைவர்), அண்ட்றே ரசல், ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட், அக்கீல் ஹொசெய்ன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஒபெட் மெக்கோய் அல்லது ரொமாரியோ ஷெப்பர்ட்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM