(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டங்களை ஒருபோதும் மாற்றியமைக்க போவதில்லை.தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை தொடர்வது நாட்டுக்கு அத்தியாவசியமானது.
பொருளாதாரத்தின் மீது சர்வதேசமும்,நாட்டு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தும் வகையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக போலியான வாக்குறுதிகளை வழங்க போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நிதி அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுத்துள்ள செயற்திட்டம் வெற்றிகரமான நிலையில் காணப்படுகிறது.
மூன்றாம் தவணை நிதி விடுவிப்பு தொடர்பில் இரண்டாம் மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை எடுத்துள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் கடைப்பிடித்த தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
வங்குரோத்து நிலைக்கு பின்னரே 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் செயற்திட்டத்தில் முதல் தவணை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதமும்,இரண்டாம் தவணை கடந்த ஆண்டு டிசெம்பர் மாதமும் கிடைக்கப் பெற்றது.
மூன்றாவது தவணையாக 336 மில்லியன் டொலர் விடுவிப்புக்கு நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட 48 மாதகால செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரையில் ஒரு பில்லியன் டொலர் வரை நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை முன்னெடுத்துள்ள செயற்திட்டங்களை நாணய நிதியம் வரவேற்றுள்ளது.மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளதையும் நாணய நிதியம் ஏற்றுக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு காணப்பட்ட சமூக கட்டமைப்பின் நிலைவரத்துக்கும் தற்போதைய நிலைவரத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொருளாதார மீட்சி;க்காக முன்னெடுத்த தீர்மானங்களினால் நாட்டு மக்கள் குறுகிய கால நெருக்கடிகளை எதிர்க்கொண்டார்கள்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீட்சி பெற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நாணய நிதியமே காண்பித்தது.சர்வதேச நாணய நிதியம் இலங்கையை ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.
வங்குரோத்து நிலைக்கு பின்னர் நாம் தான் நாணய நிதியத்தை நாடினோம்.பலவந்தமான முறையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின் பின்னர் தான் இலங்கையின் நிதி கட்டமைப்பு ஸ்திரப்படுத்தப்பட்டு இலங்கையுடன் உலக நாடுகள் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்தன.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எரிபொருள் கப்பலுக்கு கடன் பற்று பத்திரம் கூட விநியோகிக்க முடியாத இக்கட்டான நிலையில் நாடு இருந்ததை எவரும் மறந்து விடக் கூடாது.
சர்வதேச பிணைமுறியாளர்கள் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முன்வைத்த கடுமையான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டதன் பின்னரே மூன்றாம் கட்ட தவணை விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி குறிப்பிடுவது அடிப்படையற்றது.
ஒவ்வொரு தவணைக்கும் புதிதாக நிபந்தனைகள் வகுக்கப்படுவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான செயற்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதம் இடம்பெற்றது.இதன்போது பல விடயங்கள் ஆராயப்பட்டன.
சர்வதேச பிணைமுறியாளர்களுடன் இடம்பெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களுமின்றி நிறைவடைந்தது.இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியமும்,இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களும் சர்வதேச நாணய நிதியமும் தலையிட்டு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கமைய சர்வதேச பிணைமுறியாளர்கள் உறுதியான இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கடன் சமனிலை மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.நாணய நிதியத்துடனான செயற்திட்டங்களை ஒருபோதும் மாற்றியமைக்க போவதில்லை.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான நிலைப்பாடு காணப்படுகிறது வெகுவிரைவில் வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM