21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையின் வரலாறு ஈழத்தில் பறைசாற்றப்படுகிறது - தென்னிந்திய ஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தி

Published By: Digital Desk 3

11 Jun, 2024 | 03:50 PM
image

21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையில் வரலாறு ஈழத்தில் பறைசாற்றப்படுவது பெருமைக்குரிய விடயமாகும். அந்தக் கலையம்சத்தினை முழுமையாக  அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஞானவைரவர் ஆலயம் தாங்கி நிற்கின்றது என்று அவ்வாலயத்தின் தலைமை ஸ்தபதியான கலாநிதி தெட்சணாமூர்த்தி தெரிவித்தார்.

அவர், “கலையம்சம் பொருந்திகண்டோரின் கண்களைக் கவரும் பல்லவர் கால கலையம்சங்களுடன் அமையப்பெற்றுள்ள அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஞானவைரவர் ஆலயம் தற்போதுள்ள ஆலயங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பதோடு 21ஆம் நூற்றாண்டிலும் பல்லவர்கால கலையம்சம் சிறப்புற்றிருப்பதற்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது” என்று அந்த ஆலயத்தினை விழித்தார்.

தென்னிந்தியா மாமல்லபுரம் ஸ்தபதி கலாநிதி தெட்சணார்த்தி இந்த ஆலயத்தின்  சிற்ப பணிகளை முன்நின்று செய்தவராவார். இவர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள நீண்ட அனுபவம் மிக்கவராக காணப்படுகின்றார்.

இவர் கன்னியாகுமரி கடற்பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை வடிவமைத்து கட்டிய ஸ்தபதி எஸ்.பி.ஆச்சாரியின் புதல்வரும், குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்து கட்டிய ஸ்தபதி கணபதியின் மருமகனும் ஆவார். 

ஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தி இந்தியா பூராகவும், மலேசியா சிங்கப்பூர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா உட்பட சர்வதேச நாடுகளிலும் 200இற்கும் மேற்பட்ட கோவில்களை சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைத்துள்ளார் என்பதும் விசேடமாகும்.

அத்துடன், இவர் ஆகிய இரண்டு நூல்களையும் வெளியிட்டு சிற்பக்கலையை பேணிப் பாதுகாப்பதற்கு தன்னாலான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

“பொன்னம்பலவானேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட புகழ்பூத்த ஆலய திருப்பணிகளை எனது முன்னோர்கள் மேற்கொண்டுள்ள நிலையில் இடைவெளிக்குப் பின்னர் அராலியூரில் ஞான வைரவர் ஆலயத்திருப்பணிகள் கருகற்களினால் ஆகம முறைகளுடன் முன்னெடுப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிட்டியது” என்று ஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தி குறிப்பிட்டார்.

அத்துடன், “1300 வருட வரலாற்றைக் கொண்ட பல்லவர் கால கட்டட நுட்பங்களை அடியொற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் தத்தூரூபமாக அமைக்கப்பட்டுள்ள எட்டுப்பட்ட சிங்கத் தூண்கள் விசேடமானவையாக உள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 28 தூண்கள் சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிங்க வடிவிலான தூண்கள் மூன்று வகையான சிங்கங்களை மையப்படுத்தியதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இந்தக் கோயிலின் அதியுச்சமான பெறுமானம் உடையவையாக இருப்பவை சிங்கத் தூண்கள் தான். ஏனென்றால் அதன் நுட்பங்கள் ஆய்வாளர்கள், கலை அபிமானிகள் உட்பட அனைவரையும் கவர்ந்திழுப்பதாக அமைந்துள்ளது சிறப்பம்சமாக உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அராலி வைரவர் கோவிலானது 64அடிகள் நீளம் கொண்டதாகவும் 34அடிகள் அகலம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. அதேநேரம் கருவறைக்கு மேலாக கட்டப்பட்டுள்ள விமானமானது 31அடிகள் உயரமானதாக காணப்படுகின்றது. அத்தோடு சுற்றுக்கோவில்களும் பல்லவர் கால கட்டடக்கலையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

பல்லவர் வரலாறுபற்றிக் கூறிய அவர், “பல்லவர்களில் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ராஜசிம்மவர்மன், பரமேஸ்வரவர்மன் உள்ளிட்டவர்கள் சிற்பக்கலை மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவர்களாகவும் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பது வரலாறாகும்” என்றார்.

“அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் உயரிய அந்தஸ்தை வழங்கினார்கள். அத்துடன் பல்வேறு நிர்மாணங்களையும் அவர்கள் முன்னின்று மேற்கொண்டனர்.  இதனால் அவர்களுக்கு விருதுப் பெயர்கள் இயல்பாகவே தோன்றின” என்று சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, “சித்திரகாரப்புலி, சித்திரச்சிற்பன், அழுத்தகாமன் என்ற சித்திரப்பெயர்கள் அவர்களுக்க வழங்கப்பட்டுள்ளன என்பது கல்வெட்டுக்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். 

அதுமட்டுமன்றி அவர் “பல்லவ மன்னர்களின் இரண்டாம் பரம்பரையினருக்கு ‘அதீத காமன்’ என்கிற விருதுப்பெயரும் உண்டு. அதாவது, அவர்கள் சிற்பக்கலை மீது அளவுகடந்த காதலைக் கொண்டவர்கள் என்பதற்கான அடையாளமாக அப்பெயர் இடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதற்கான உதாரணமாக, “மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் என்பது தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக்கோயிலாகும். இது இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45அடி உயரம் கொண்டதாகும். இது சிற்பக்கலையில் உயர் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது” என்று உதாரணம் காண்பித்தார்.

அத்தோடு, “பல்லவர்களின் சிற்பக்கலை மீதான பற்றைப்போன்று அதேயொத்த ஈடுபாட்டு அலையை வெளிப்படுத்துபவராக திருக்குமாரன் நடேசன் இருக்கின்றார். அவர் அராலி ஆலயத்தினை அமைப்பதில் அத்துணை ஆர்வத்துடன் ஈடுபட்டார் என்பது பெருமைக்குரிய விடயமாகின்றது” என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், “பல்லவர்கால நுட்பங்களுடன் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயமானது, ஈழத்தில் மிக முக்கியமானதாக இருப்பதோடு மட்டுமல்லாது, வரலாற்றை மீளுருவாக்கம் செய்து பரம்பரைகளைக் கடந்தும் பேணிக்காப்பதாகவும் உருவெடுத்திருக்கின்றமை பெருமைக்குரியது” என்றும் சஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தி கூறினார்.

இதேவேளை, இவர் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் அரிய சிற்பங்களை வடிவமைத்தமைக்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இதனைவிடவும், இவர் இளம் சிற்பிகளுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகின்மையும் விசேட அம்சமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25