(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கெதிராக தாமும் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.
அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்புடன், நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். இது தொடர்பான முன்மொழிவை நாம் சமர்ப்பித்த போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இவ்வாறான முட்டாள் தனமான தீர்மானங்களால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாம் முற்றாக அழிந்து போகக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்தது.
பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு, ரேணுகா சிட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் சேனக அலவத்தேகம, பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர, பேச்சாளர் ரொஷான் இராஜதுறை, கொழும்பு தேயிலை வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்ஜய் ஹேரத், சிரேஷ்ட தேயிலை ஏற்றுமதியாளர் அன்ஸ்லம் பெரேரா, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜகத் பத்திரண உள்ளிட்டோரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுறை தெரிவிக்கையில்,
சம்பள உயர்வை வழங்க முடியாது என நாம் கூறவில்லை. ஆனால் உற்பத்தி செலவு மற்றும் வருமானம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அடிப்படை சம்பளத்தை 200 ரூபாவால் அதிகரித்து, நாளாந்த மொத்த சம்பளமாக 1380 ரூபாவை வழங்குவதற்கான யோசனையை முன்வைத்துள்ளோம். எனினும் அரசாங்கமும், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் அந்த யோசனையை நிராகரித்துள்ளன.
உற்பத்தி திறன் மற்றும் வருமானத்துடன் இணைக்கப்பட்ட சம்பள மாதிரியை அல்லது தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை உற்பத்தி திறன் மற்றும் வருமானத்துடன் இணைக்கும் வருவாய் பகிர்வு மாதிரியை நாம் முன்மொழிந்துள்ளோம். அந்த முன்மொழிவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
1992இல் அரசாங்கம் தன்னால் நிர்வகிக்க முடியாத நிலைமையிலேயே தோட்டங்களை கம்பனிகளிடம் குத்தகைக்கு வழங்கியது. இவற்றில் பல பில்லியன்களை கம்பனிகள் முதலீடு செய்துள்ளன. அது மாத்திரமின்றி பங்குகளையும் கொள்வனவு செய்துள்ளன. எனவே தற்போது தோட்டங்களை சிறந்த நிலைமைக்கு கொண்டு வந்ததன் பின்னர் ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு எவ்வாறு கூற முடியும்? அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாம் அதனை சட்ட ரீதியாக அணுகுவோம்.
1700 ரூபா வழங்க முடியும் என்றால் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள தோட்டங்களில் அதனை செய்து காண்பிக்குமாறு சவால் விடுக்கின்றோம். எம்மால் வழங்கக் கூடிய அதிகபட்ச நாளாந்த சம்பளம் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கவில்லை. முதலாளிமார் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பங்குடைமையாளர்களுடன் பேசியே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.
சிரேஷ்ட தேயிலை ஏற்றுமதியாளர் அன்ஸ்லம் பெரேரா தெரிவிக்கையில், ஆட்சியாளர்களினால் எடுக்கப்பட்ட தான்தோன்றித்தனமான சில முடிவுகளாலேயே இன்று பெருந்தோட்டங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முட்டாள்தனமான தீர்மானங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமானால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாமம் அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது. இது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM