'உறுமய' காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவது விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஆரம்ப முன்னெடுப்பு என ஜனாதிபதி வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற உறுமய காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
"உறுமய" திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 700 முழு உரிமையுள்ள காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று காலை வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வழங்கப்பட்டது.
"உறுமய" திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு 5400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதன் முதற்கட்டமாக இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
"1935 முதல் மக்களுக்கு விவசாயம் செய்வதற்கும் வீடு கட்டுவதற்கும் காணிகளின் உரிமம் வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தின் முழுமையான உரிமை வழங்கப்படவில்லை. எனவே, உங்களுக்கு முழு உரிமையுடன் காணிஉறுதி வழங்க முடிவு செய்தேன். இவ்வாறு முழு உரிமையுடன் காணி உறுதிப் பத்திரம் வழங்கினால் மக்கள் நிலத்தை விற்றுவிடுவார்கள் என்று பலர் கூறினர். இரண்டு தலைமுறைகள் அனுபவித்த நிலத்தை நீங்கள் விற்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
கடந்த காலங்களில் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அந்த நெருக்கடியின் காரணமாக இந்நாட்டில் சுமார் எழுபது சதவீத மக்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இன்று வழங்கப்படும் காணி உறுதியினால் உங்களின் சொத்து மதிப்பு உயரும்.
இந்த நிலங்களைப் பயன்படுத்தி நவீன விவசாயத்தை உருவாக்க பங்களிக்க வேண்டும். இதனூடாக நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க முடியும். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போது நீங்கள் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாக இது இருக்கும். மல்வத்து ஓயா திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மன்னார் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையை இதனைவிட இலகுவாக மேற்கொள்ள முடியும்" என ஜனாதிபதி தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவிக்கையில்,
"வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதி வழங்கப்படும் இந்த நாள் பொன்னான நாளாகும். ஆளணிப் பிரச்சினை இல்லாவிட்டால் மேலும் பலருக்கு இந்த உறுதி வழங்க முடியும். இது ஒரு நீண்ட செயற்பாடாகும்.
எதிர்காலத்தில் இதனைவிடத் துரிதமாக காணி உறுதி வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூர நோக்குடன் ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார். அடுத்த வருடமும் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும். அவரின் கரத்தை நாம் பலப்படுத்த வேண்டும். மன்னார் மாவட்ட மக்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றுக்கும் தீர்வு வழங்க வேண்டும்" என்றார்.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கூறுகையில்,
"5 மாவட்டங்களில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்தார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, காணி உறுதி என பல திட்டங்களை கடந்த மூன்று தினங்களில் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் அவர் செவிசாய்த்து தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சிரமங்களுக்கு மத்தியில் சூறாவளி பயணம் மேற்கொண்டு மன்னார் மாவட்டம் தவிர சகல மாவட்டங்களுக்கும் சென்று இவற்றை முன்னெடுத்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,
"வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தது தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
காணி உறுதி வழங்குவதன் ஊடாக இப்பகுதி மக்களுக்கு விடிவு காலம் கிடைத்துள்ளது. இது போதுமானதல்ல. 20 இலட்சம் காணி உறுதி வழங்கப்படுமானால் வன்னியில் காணி உறுதி அற்ற எவரும் எஞ்சமாட்டார்கள்.
பிரதமராக இருந்த போது நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆஸ்பத்திரிகளை நிர்மாணிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அவற்றை திறந்துவைத்தது தொடர்பில் எமது நன்றியை தெரிவிக்கிறோம்.
ஜனாதிபதி மன்னாருக்கு விஜயம் செய்யாத போதும் மன்னாரில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தி அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். காணி உறுதி பெற்றவர்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் விநோ நோகராதலிங்கம் கூறுகையில்,
"வடக்குக்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார். எமது பிரதேசத்தில் நடைபெறும் இந்த அபிவிருத்தித் திட்டங்களில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு முடிந்தளவு ஆதரவை அரசுக்கு வழங்கி வருகிறோம். ஜனாதிபதி முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. வாடகை காணியில் வாழ்ந்த உணர்வுடன் வாழ்ந்த மக்களுக்கு விடுதலை கிடைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன் உள்ளிட்ட வடக்கு அரசியல் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ. சரத்சந்ர உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM