கிளிநொச்சி மாவட்டத்தில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி உரிமைகளை வழங்க வேண்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணிப் பிரச்சினைகளுக்காகவே மக்கள் அதிகமாக அரசாங்க அலுவலகங்களுக்கு வருகின்றனர். காணி பிரச்சினைகளுக்காகவே அதிகமான கடிதங்களை எழுதுகின்றனர். தற்பொது உங்களின் காணிப் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி நேரடியாக வந்து தந்துள்ளார். இன்று அந்தக் காணிகளை உங்களுக்கே உரித்தாகிறது. இனிமேல் அரச அலுவலங்களுக்குச் செல்லத் தேவையில்லை.
இந்த மாவட்டத்தில் 45 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி உரிமைகளை வழங்க வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். காணி இல்லாத ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் காணிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இளைஞர்களுக்கு விவசாயம் செய்வதற்காக காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். உங்களின் முன்னோர்கள் காணிகளைப் பெறுவதற்காக போராடியிருப்பார்கள். தற்போது இந்தப் பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்துவைத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் நேற்று 1200 காணி உறுதிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
பூநகரி பகுதியில் 500 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. குளங்கள், கால்வாய்கள் அணைக்கட்டுகள் திருத்தப்பட்டு, பயிர்ச் செய்கையை ஊக்கவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 4.5 மில்லியன் ரூபா பெறுமதியில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இந்த வீடுகளை நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
280 மில்லியன் ரூபா இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு வடக்கில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வட மாகாணத்தில் ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். குடிநீர், சுகாதாரம், கல்வி, காணி உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு வழங்கி வருகிறார். இதற்கு நன்றியுடையவர்களாக வடக்கு மக்கள் இருக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM