அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை பின்பற்றி, சட்டத்தை பேணுவது அவசியம்

20 May, 2024 | 12:41 PM
image

பதினைந்து வருடங்களுக்கு முன்னர்  உள்நாட்டுப் போரின் இறுதியில் உயிரிழந்த சகல தரப்பு மக்களினதும் நினைவாக கடந்த வெள்ளிக்கிழமை (17) மாலை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் "திருப்புமுனை" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது. 

இது மூன்று தசாப்த காலப் போரின் காயங்கள் குணப்பட ஆரம்பிக்கின்றன என்பதன் ஒரு அறிகுறியாகும். மதங்களுக்கு இடையிலான குழுக்கள், புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களை உள்ளடக்கிய சிவில் சமூகக் கூட்டமைப்பு ஒன்றே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

தர்மசக்தி இயக்கம், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம்,  பௌத்த இளைஞர் சங்கம், சிறந்த இலங்கைக்கான மகா சங்கம் மற்றும்  உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் வகித்த தலைமைத்துவப் பாத்திரத்தை தேசிய சமாதானப் பேரவை மெச்சுகிறது. 

திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சகல இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்களும் மதகுருமாரும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். 

போரின்போது உயிரிழந்த பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட சகல உயிர்களின் மீதுமான பொது அக்கறையைப் பிரதிபலிப்பவையாக அங்கு வைக்கப்பட்டிருந்த படங்களும் நிகழ்த்தப்பட்ட உரைகளும் அமைந்திருந்தன. 

ஆனால், மே 18ஆம் திகதி வடக்கிலும் கிழக்கிலும் துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டமையும் மே 19ஆம் திகதியை அரசாங்கம் வெற்றித் தினமாக அனுஷ்டித்து பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கியமையும் நினைவுகூரல் விவகாரத்தில் தொடருகின்ற துருவமயத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. போர் முடிவுக்கு வந்த பிறகு எப்போதுமே செய்யப்பட்டதைப் போன்று வடக்கிலும் கிழக்கிலும் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு முன்னதாக பாதுகாப்பு படைகளின் பிரசன்னம் கடுமையாக பலப்படுத்தப்பட்டிருந்தது.

மே 18ஆம் திகதியை அல்லது அந்த வாரம் முழுவதையும் துக்க காலப்பகுதியாக அனுஷ்டிக்க விரும்பியவர்களை கொடுமைப்படுத்தி கைதுசெய்த பொலிஸாரின் நடவடிக்கையை தேசிய சமாதானப் பேரவை மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. 

போரில் உயிரிழந்தவர்கள் எந்த தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சகலரும் இலங்கையர்களே. 

கடந்த வாரம் நடந்ததைப் போன்று உயிரிழந்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர முயற்சித்தமைக்காக ஆண்களையும் பெண்களையும் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது வீடுகளில் இருந்து இழுத்துச் சென்று கைதுசெய்வதல்ல, தேசிய நல்லிணக்கத்துக்கான பாதை.

நீதி இல்லை என்றால் நல்லிணக்கச் செயன்முறை என்ற ஒன்று இருக்கமுடியாது. போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு மக்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. உண்மையில், இழப்பீட்டு சட்டத்தில் அதற்கான ஏற்பாடு இருக்கிறது. பயனுறுதியுடைய பரிகாரம் ஒன்றைக் காண்பதற்கான உரிமையை அங்கீகரித்தல், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பயனளிக்கக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்தல், உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அஞ்சலி செய்வதற்கு  நினைவிடங்களை நிர்மாணித்தல் உட்பட அஞ்சலி செய்வதற்கு வழிவகை செய்தல்  போன்ற நடவடிக்கைகளே கூட்டு இழப்பீடுகளாக அமைவதாக இழப்பீட்டு சட்டத்தின் 27வது பிரிவு கூறுகிறது.

நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால், போரில் உயிரிழந்த சகலரையும் நினைவுகூருவதற்கு சிவில் சமூக அமைப்புக்கள் காட்டிய உதாரணத்தைப் பின்பற்றி சட்டத்தைப் பேணுவதே அரசாங்கம் செய்யவேண்டிய காரியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் பொறுப்புக்கூறலை...

2025-03-26 13:31:44
news-image

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றுதல்

2025-03-26 14:11:02
news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 14:14:36
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53