(நெவில் அன்தனி)
இண்டியன் பிறீமியர் லீக்கின் 17ஆவது அத்தியாயத்தில் தனது கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த போதிலும் ப்ளே ஓவ் சுற்று வாய்ப்பை உறுதி செய்துகொண்டுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ், அணிகள் நிலையில் முதலிரண்டு இடங்களில் இருப்பதை உறுதிசெய்வதற்கு இன்றைய போட்டியில் முயற்சிக்கவுள்ளது.
தனது முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை ஈட்டிய ராஜஸ்தான், கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் ஒரு ஓட்டத்தாலும், டெல்ஹி கெப்பிட்டல்ஸிடம் 20 ஓட்டங்களாலும் சென்னை சுப்பர் கிங்ஸிடம் 5 விக்கெட்களாலும் தோல்விகளைத் தழுவியது.
இந்தத் தொடர் தோல்விகளிலிருந்து மீள்வதைக் குறிக்கோளாகக் கொண்டும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவதை தடுக்கும் நோக்கிலும் கடைநிலை அணியான பஞ்சாப் கிங்ஸை இன்று (15) இரவு நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் சந்திக்கவுள்ளது.
டெல்ஹியில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டதால் ராஜஸ்தான் றோயல்ஸ் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டது.
எவ்வாறியினும் அடுத்துவரும் போட்டிகளில் ராஜஸ்தான் றோயல்ஸ் துடுப்பாட்ட வரிசையில் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.
ரி20 உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து குழாத்துடன் அதிரடி வீரர் ஜொஸ் பட்லர் இணைந்துகொண்டதால் ராஜஸ்தானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
அத்துடன் உபாதை காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஷிம்ரன் ஹெட்மயர் பூரண குணமடைந்து விட்டாரா என்பது இன்னும் தெரியவரவில்லை.
பட்லரின் இடத்தை இங்கிலாந்து லயன்ஸ் அணி வீரர் டொம் கொஹ்லர் கெட்மோர் நிரப்பலாம் என கருதப்படுகிறது. மற்றைய ரி20 லீக் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வருகின்றபோதிலும் IPLஇல் அவர் இதுவரை விளையாடியதில்லை.
வழமையான ஆரம்ப அதிரடி வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் இம்முறை பெரியளவில் சாதிக்கவில்லை. அவர் 10 போட்டிகளில் ஒரு சதத்துடன் 315 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். அவரது துடுப்பிலிருந்து இன்றைய போட்டியில் கணிசமான ஓட்டங்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியில் இடம்பெறும் மற்றொரு அதிரடி வீரரான த்ருவ் ஜுரெல், உள்ளூரில் பிரதான கிரிக்கெட் (ரஞ்சி கிண்ணம்) போட்டியில் உத்தர் ப்ரதேஷ் அணியில் ஆரம்ப வீரராகத் துடுப்பெடுத்தாடி வருபவர். ப்ளே ஓவ் சுற்றுக்கு முன்னர் ரி20யில் அவரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதேவேளை, இன்றைய போட்டியிலும் தனது கடைசிப் போட்டியிலும் ராஜஸ்தான் றோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை வீழ்த்தி ஆறுதல் வேற்றிகளை ஈட்டுவதற்கு கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் முயற்சிக்கவுள்ளது.
எனினும் இந்த இரண்டு அணிகளிடமும் முதல் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி அடைந்திருந்ததால் இரண்டாம் சுற்றில் சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இங்கிலாந்து உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறும் லியாம் லிவிங்ஸ்டோன் தனது முழுங்காலில் ஏற்பட்ட உபாதையை குணப்படுத்திக்கொள்வதற்காக நாடு திரும்பியுள்ளார்.
பஞ்சாப் அணியில் இடம்பெறும் ப்ரப்சிம்ரன் சிங், ஜொனி பெயாஸ்டோவ், ரைலி ரூசோவ், ஷஷாங் சிங், ஆகிய அதிரடி வீரர்கள் இன்றைய போட்டியில் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் இன்றைய போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும் கடைசிப் போட்டிகள் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக முயற்சிப்பது உறுதி.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM