இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று உங்கள் பெருந்தோட்ட மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொட்டகலை பொது மைதானத்தில் இன்று புதன்கிழமை (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இன்றைய மேதின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த சம்பளத்தை உயர்த்த ஒரு வருடம் கடுமையாக முயற்சி எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
மே முதலாம் திகதிக்கு முன்னர் இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.
பல மாதங்களுக்கு முன்னரே பெருந்தோட்டக் கம்பனிகளை வரவழைத்து இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. பெருந்தோட்டங்கள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. உங்களுக்கு தேவையான வசதிகளை அவர்களால் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும்.
அதற்கமையவே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதோடு நிற்காமல், மேலதிகமான ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்காகவும் 80 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிட்டு அதனை உங்கள் முன்னிலையில் அறிவித்துள்ளார்.
ஒரே இலங்கை தேசமாக உங்களுக்காக காணி உரிமை உட்பட சகல உரிமைகளையும் வழங்குவதே தற்போதைய ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டமாகும்.
இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று உங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் அவர் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் மே தினக் கூட்டமும் பேரணியும் நடைபெற்றதுடன் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணப்படுகிறது.
மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு மலையக மக்களினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன்,தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல்,பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தலைவி அனுஷியா சிவராஜா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM