ஹைபர்லிங்க் பாணியில் தயாராகும் 'நிறம் மாறும் உலகில்'

Published By: Digital Desk 7

22 Apr, 2024 | 10:46 PM
image

தமிழ் சினிமாவின் ஒரு கதையை  முதன்மையான கதாபாத்திரம் அதற்கு துணை புரியும் பல்வேறு கதாபாத்திரங்கள்  என விவரித்து , அதற்கு ஒரு தொடக்கம் ஒரு இடை நிறுத்தம் ஒரு உச்சகட்டம் பின் ஒரு முடிவு என இயக்குநர்கள் பார்வையாளர்களை மகிழ்விப்பதுண்டு.‌ தற்போது நான்கு கதை நான்கு கதைக்கும் இடையே ஒரு இணைக்கும் புள்ளி என புதிய பாணியில் கதை சொல்கிறார்கள் இயக்குநர்கள். அந்த வகையில் தற்போது 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், நடன இயக்குநர் சாண்டி ஆகிய நால்வர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படம் ஹைபர் லிங்க் பாணியில் உருவாகி இருக்கிறது.‌

அறிமுக இயக்குநர் ஜே பி பிரிட்டோ இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, லிசி ஆண்டனி, நமோ நாராயணன், விஜித், ஜீவா சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  மல்லிகா அர்ஜுன் மற்றும் மணிகண்ட ராஜா ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள்   இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் பா. ரஞ்சித், தேசிங் பெரியசாமி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ் குமரன் ஆகியோர் இணைந்து இணையதளத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.‌

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' நான்கு விதமான வாழ்க்கை நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு மைய புள்ளி என ஹைப்பர் லிங்க் பாணியில் இப்படத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வில் உறவுகளின் அவசியத்தை வலியுறுத்தி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.  மும்பை, வேளாங்கண்ணி, திருத்தணி, சென்னை என நான்கு கதைகளும் வெவ்வேறு நிலவியல் பின்னணியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு கதையையும் திரையில் வெளிப்படுத்தும்போது வித்தியாசப்படுத்துவதற்காக வெவ்வேறு  வண்ணங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது.  இது ரசிகர்களுக்கு புது விதமான அனுபவமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். '' என்றார்.

ஃபர்ஸ்ட் லுக்கிலும் நடிகர்கள் பாரதிராஜா, நட்டி, சாண்டி, ரியோ ராஜ் ஆகிய நால்வரும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right