விஷாலின் 'ரத்னம்' 60 : 40

Published By: Digital Desk 7

20 Apr, 2024 | 05:24 PM
image

தமிழ் திரையுலகில் இயக்குநர் ஹரிக்கு என தனியாக ரசிகர் வட்டம் உண்டு. இவர் இயக்கிய பதினைந்திற்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை என்பது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். இதனை தன்னுடைய முத்திரையாக பதித்து தனி பாணியில் படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரத்னம்' எனும் திரைப்படம், '60 சதவீதம் எக்சனும் 40 சதவீதம் சென்டிமென்ட்டும் கலந்து இருக்கும்' என இயக்குநர் ஹரி தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரத்னம்' எனும் திரைப்படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், ராமச்சந்திர ராஜு, முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, ஜெயப்ரகாஷ், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜி ஸ்டுடியோ, இன்வீனியோ அர்ஜின் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம், அலங்கார் பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதன் போது படக்குழுவினர் பங்குபற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஹரி பேசுகையில், '' இது எனக்கு 17 வது படம். 'தாமிரபரணி', 'பூஜை' ஆகிய படங்களுக்குப் பிறகு விஷாலுடன் இணைந்திருக்கும் மூன்றாவது திரைப்படம். விஷால் நடிப்பில் வெளியான இரண்டு திரைப்படங்களிலும் ஃபேமிலி சென்டிமென்ட் அதிகமாக இருக்கும். அதனால் இந்த முறை சென்டிமென்டை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, எக்சனை அதிகப்படுத்தி இருக்கிறேன். அதாவது 60 சதவீதம் எக்சனும், 40 சதவீதம் ஃபேமிலி சென்டிமென்ட்டும் இப்படத்தில் இருக்கும். இந்த திரைப்படத்தில் மட்டும் எட்டு சண்டை காட்சிகள் இருக்கிறது. இதில் ஒரு சண்டைக் காட்சியை சிங்கிள் ஷாட்டில் எடுத்திருக்கிறோம். இது கதையில் திணித்ததாக இல்லாமல் இயல்பாக இருக்கும் வகையில் ஒட்டுமொத்த பட குழுவினரும் கடினமாக உழைத்து உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பொதுவாக நான் பயணம் மேற்கொள்ளும் போது விளிம்பு நிலையில் வாழும்  மக்களிடம் பேச்சு கொடுத்து அவர்களின் ரசனையை தெரிந்து கொள்வதுண்டு. அவர்களுக்கு வெற்றிமாறன், பா. ரஞ்சித் ஆகியோர் இயக்கத்தில் வெளியான படங்களில் இடம் பிடித்த எக்சன் காட்சிகள் பிடித்திருக்கிறது என்று  சொன்னார்கள். அவர்களைப் போல் எக்சன் காட்சியை இடம்பெற வைக்க வேண்டும் என்று விரும்பி சண்டை காட்சிகளை இயல்பாக உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தில் விஷால் எக்சன் காட்சிகளிலும்,  எமோஷனலான சென்டிமென்ட் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என நம்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்