கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : ஒருதலை பட்சமாகத் தீர்வுகாண முடியாது : தமிழ்த் தரப்புடன் பேசத் தயாரென மு.கா.அறிவிப்பு

15 Apr, 2024 | 05:06 PM
image

(ஆர்.ராம்)

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு ஒருதலைபட்சமாகத் தீர்வு காண முடியாது என்பதோடு அவ்விடயத்திற்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காகத் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலத்திற்கான கணக்காளர் நியமனம் மற்றும் தரமிறக்குவதற்கான நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலக விடயம் சம்பந்தமாக நாம் கடந்த காலங்களில் தமிழ்த் தரப்புடன் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அந்த பேச்சுக்களை முன்னெடுத்து நிரந்தமானதொரு தீர்வினை எட்டமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். அவர்கள் தங்களுடைய விடயங்களுக்காக ஜனநாயக ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கான சகல உரிமைகளும் அவர்களுக்கு உள்ளது. எனினும், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் ஒருதலைபட்சமாகத் தீர்மானங்களை எடுக்க முடியாது. 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குள் 29 கிராம சேவகர் பிரிவுகள் தமிழர்களுக்கு உள்ளன. அதேபோன்றே 29கிராம சேவகர்கள் பிரிவு முஸ்லிம்களுக்கு உள்ளன. தமிழர்களுக்குக் காணப்படும் 29 கிராமசேவர்கள் பிரிவில் 30சதவீதமானவர்கள் வசிப்பதோடு முஸ்லிம்களுக்குக் காணப்படும் 29 கிராம சேவகர்கள் பிரிவில் 70சதவீதமான முஸ்லிம்கள் வசிக்கின்றார்கள்.

ஆகவே இங்கே பிரச்சினையாக இருப்பது எல்லைகள் தான். எனவே மக்கள் தொகைக்கு ஏற்றவாறு எல்லைகளை மீள் நிர்ணயம் செய்து அதன் பின்னர் அவற்றை உரியவகையில் தமிழ்த் தரப்பும், முஸ்லிம் தரப்பும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பது தான் பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும்.

அந்த வகையில் நாம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்திற்கு எந்தவொரு தரப்பினரும் பாதிக்கப்படாத வகையில் உரியத் தீர்வினை எட்டுவதற்காகத் தமிழ் தரப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்குத் தயாராகவே உள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் சிறுவன் நீரில்...

2025-04-25 01:52:13
news-image

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில்...

2025-04-24 21:56:07
news-image

தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக்...

2025-04-24 21:55:36
news-image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன்...

2025-04-24 21:25:17
news-image

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில்...

2025-04-24 17:04:13
news-image

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின்...

2025-04-24 17:52:31
news-image

வொஷிங்டனில் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் இலங்கை...

2025-04-24 15:49:58
news-image

அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை...

2025-04-24 20:29:37
news-image

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...

2025-04-24 14:54:42
news-image

இப்ராஹிமின் சொத்துக்களை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

2025-04-24 19:03:22
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர்...

2025-04-24 17:59:48
news-image

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை -...

2025-04-24 18:34:51