(லியோ நிரோஷ தர்ஷன்)
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நவீன பாதுகாப்பு தளவாடங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை முழுமையாக வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே மேற்கண்டவாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கான இலங்கை - இந்திய பாதுகாப்பு கருத்தரங்கு கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
பாதுகாப்பு உறவுகளில் இலங்கை - இந்திய இருதரப்பு ஒத்துழைப்பை பல்வகைப்படுத்துவதை டெல்லி ஆர்வமாக முன்னெடுத்து வருவதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன் போது அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் புவியியல் காரணமாக, இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் அதிகரித்து வரும் திறன்களை இலங்கைக்கு விரிவுபடுத்துவதற்கான வழிகள் ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மிக சமீபத்தில் இலங்கை ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்தும் வகையில் மிதக்கும் கப்பல்துறை, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் டோர்னியர் விமானங்களை வழங்கியமை உள்ளிட்ட பல விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இது மாத்திரமன்றி இரு நாடுகளுக்கு இடையில் நில இணைப்புகள் குறித்தும் தீவிரமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், இந்திய பெருங்கடலை நோக்கிய அமெரிக்காவின் பார்வையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையுடனான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளது.
இதன் பிரகாரமே இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் என்ற உறுதிப்பாட்டை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் வழங்கியுள்ளார்.
இதேவேளை அமெரிக்க மத்திய உளவுத்துறை (சி.ஐ.ஏ) தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் தலைமையிலான குழுவினர் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். குறித்த விஜயமானது உயரிய இரகசிய விஜயத்திற்குறிய இராஜதந்திர மரபுகளுக்கு உட்பட்டிருந்தது.
அமெரிக்க மத்திய உளவுத்துறை தலைவர் உள்ளிட்டவர்களின் இலங்கை விஜயத்தின் போது அரச உயர் மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்புகளில் முக்கிய திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
அதில் பிரதானமானதாக அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை ஸ்தாபிப்பதாகும். இந்த அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை அமெரிக்க அரசின் உதவி திட்டமாக வழங்க முடியும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டால், விமான நிலையத்தை பயன்படுத்தி இலங்கைக்குள் வரும் அல்லது வெளிச் செல்லும் எந்தவொரு நபர் குறித்த தகவல்களும் உடனுக்குடன் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனினால் பெற்றுக்கொள்ள முடியும். அதே போன்று மேலும் இரு திட்டங்களுக்கான யோசனைகளையும் அமெரிக்க மத்திய உளவுத்துறையினர் முன் வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.
அதாவது, இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு கடல் வழியாக கொண்டுச் செல்லப்படுகின்ற கேபிள் இணைப்புகளுக்கு பதிலாக புதிய இணைப்பு கட்டமைப்பை வழங்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்பை உருவாக்குதல் என்பனவாகும்.
இந்த திட்டங்கள் அனைத்துமே அமெரிக்க உதவி திட்டங்களாக இலங்கைக்கு வழங்க விரும்புவதாக அமெரிக்க மத்திய உளவுத்துறையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM