(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிப்புற்றிருக்கும் நிலையில், அவர்களின் பசியைத் தீர்க்கும் நோக்கில் வேல்ட் விஷன் அமைப்பினால் 'Enough' (போதும்) எனும் மகுடத்திலான புதிய செயற்றிட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாளாந்தம் பசியுடன் இருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துவருவதனால் அதனை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் வேல்ட் விஷன் அமைப்பானது அரசாங்கம் மற்றும் ஏனைய தன்னார்வ கட்டமைப்புக்களுடன் இணைந்து 'Enough' (போதும்) எனும் மகுடத்திலான புதிய செயற்றிட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்படி எந்தவொரு நெருக்கடி நிலையின்போதும் சிறுவர்களே வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், அண்மைய காலங்களில் மோதல்கள், காலநிலை மாற்றம், கொவிட் - 19 பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதாரம் போன்ற காரணிகள் பசியுடன் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கையில் மிகையான அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் வேல்ட் விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'Enough' செயற்றிட்டமானது சிறுவர்களின் பசியைத் தீர்ப்பதற்கு உலகளாவிய ரீதியிலுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் ஆதரவைத் திரட்டுவதைப் பிரதான நோக்காகக் கொண்டிருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் நிலையான உணவு உற்பத்தி மற்றும் அதனை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கான தீர்வு என்பன அவசியமாக இருப்பதாகவும் வேல்ட் விஷன் அமைப்பின் தெற்காசிய மற்றும் பசுபிக் பிராந்திய தலைவர் செரியன் தோமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று சிறுவர்களின் பசியைத் தீர்ப்பதற்கு அப்பால், வறுமை மற்றும் பசியின் பிடியிலிருந்து சமூகங்களை மீட்டெடுத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான பிரதான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல், கொள்கைகள், கல்வி முறைமை, சுகாதாரம் மற்றும் உணவு தயாரிப்பு செயன்முறை போன்றவற்றில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தல் என்பனவும் 'Enough' செயற்றிட்டத்தின் நோக்கங்களாகக் காணப்படுகின்றன.
'பசியை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு நாம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். இருப்பினும் நாமனைவரும் ஒன்றிணைந்து மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இப்போது பசி என்பது ஒரு குழந்தையின் பெயர். ஒரு குழந்தையின் முகம். நாமனைவரும் இணைந்து எந்தவொரு சிறுவரும் புறக்கணிக்கப்படாமல், அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக அவர்கள் கல்வி பயில்வதற்கும், விளையாடுவதற்கும், ஆராய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கும், முழுத்திறனையும் அடைவதற்கும் பங்களிப்புச் செய்யமுடியும்' என வேல்ட் விஷன் லங்கா அமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா அறைகூவல் விடுத்துள்ளார்.
படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM