(நா.தனுஜா)
நாட்டுக்கு வருகைதந்திருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடனான சந்திப்பைப் புறக்கணித்திருக்கும் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், இலங்கை மக்களின் கரிசனைக்குரிய விடயங்களை நிவர்த்தி செய்வதை முன்னிறுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான முயற்சிகளை தாம் காணும்வரை, நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது.
அதனையடுத்து முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் நோக்கில் நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழு நாட்டுக்கு வருகைதந்திருப்பதுடன், பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்திவருகின்றனர்.
அதன்படி தற்போது இடம்பெற்றுவரும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களின் முன்னேற்றம் மற்றும் ஊழலுக்கு எதிரான மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட ஆளுகைசார் விடயங்கள் தொடர்பில் கேட்டறியும் நோக்கில் செவ்வாய்கிழமை (19) கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தெரிவுசெய்யப்பட்ட சில சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்திப்பதற்கு நாணய நிதிய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இருப்பினும் அச்சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்து, அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி சிவில் சமூக அமைப்புக்களால் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஈடுபாடு குறித்தும், இலங்கை அரசாங்கம் மற்றும் நாணய நிதியத்தின் கூட்டு சிக்கன நிகழ்ச்சித்திட்டம் நாட்டுமக்களில் பெரும்பான்மையானோர் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாணய நிதியத்துடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பேணிவரும் விமர்சனமற்ற ஈடுபாடு குறித்தும் தீவிர கரிசனை மற்றும் சந்தேகம் கொண்டிருக்கின்றோம்.
சமூகத்தில் ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகள் இந்நெருக்கடியுடன் மேலும் தீவிரமடைந்துவருவதுடன், பெருமளவான மக்கள் பொருளாதார மீட்சி குறித்த நம்பிக்கையின்றி வறுமையில் சிக்கியுள்ளனர்.
இருப்பினும் அரசாங்கமானது தமக்கு வேண்டப்பட்டோருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாதவண்ணம், தெரிவுசெய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரம் அதன் சிக்கன நடவடிக்கைகளைப் பிரயோகிக்கின்றது. இதற்கு மத்தியில் சில துறைகளுக்கு மாத்திரம் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதுடன், ஏனையவற்றுக்கு அவை வழங்கப்படுவதில்லை.
சர்வதேச நாணய நிதியம் இதற்கு முன்னர் பல தடவைகள் உள்நாட்டு சிவில் சமூக அமைப்புக்களை சந்தித்துள்ளது. குறிப்பாக தற்போதைய உதவிச்செயற்திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சிவில் சமூகத்தினர் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், அவை கருத்திற்கொள்ளப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தொழில்நுட்ப உதவி அறிக்கை மற்றும் கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு என்பவற்றை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையைப் பேணல், நியாயமானதொரு கடன்மறுசீரமைப்பு செயன்முறை ஊடாக நாட்டின் கடன் கையிருப்பை நிலையான மட்டத்துக்குக் கொண்டுவரல், அண்மையகால மறுசீரமைப்புக்களால் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அங்கீகரிப்பதுடன் இம்மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பின்பற்றிவரும் ஜனநாயக விரோத வழிமுறையை நிராகரித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கை மக்களின் கரிசனைக்குரிய விடயங்களை நிவர்த்தி செய்வதை முன்னிறுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான முயற்சிகளை நாம் காணும்வரை, நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்கமாட்டோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM