(நா.தனுஜா)
வெடுக்குநாறிமலை விவகாரம் உள்ளடங்கலாக தமிழ்மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் இன, மத, கலாசார ரீதியிலான ஒடுக்குமுறைகளைக் கண்டித்து தமிழ் எம்.பிக்கள் பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கவேண்டுமென முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னரேயே ஒருமித்த தீர்மானமொன்றை மேற்கொள்ளமுடியுமென தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அதற்கு எதிராகக் கடந்த திங்கட்கிழமை சிவில் சமூகப்பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று விசேட குழுவொன்றை அமைத்து இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விரு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் சனிக்கிழமை (16) மு.ப 11.00 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இப்போது தான் கொழும்பில் இருப்பதாகவும், எனவே இச்சந்திப்பில் கலந்துகொள்வது குறித்து உறுதியாகத் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பில் தான் ஆஜராகியிருப்பதனால், அதனுடன் தொடர்புடைய சட்ட விவகாரம் பற்றி தன்னிடம் கேட்டால் அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு பாராளுமன்ற அமர்வைப் புறக்கணித்தல் தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானமொன்றுக்கு வரமுடியும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
அதேபோன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரனிடம் இதுபற்றி வினவியபோது, வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணங்கியிருப்பது குறித்து இச்சந்திப்பில் ஆராயப்படவிருப்பதனால், கட்சிக்குள் கலந்துரையாடியதன் பின்னரேயே அதில் தாம் பங்கேற்பது பற்றித் தீர்மானிக்கமுடியும் எனப் பதிலளித்தார்.
அதேவேளை 'இச்சந்திப்பில் கலந்துகொள்வேன்' எனக் குறிப்பிட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இருப்பினும் பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பது பற்றி விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னரே ஒருமித்த தீர்மானத்துக்கு வரமுடியும் எனத் தெரிவித்தார்.
மேலும் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்படவிருக்கும் விசேட குழுவில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், ஆனால் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM