(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் கட்சித் தலைவர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட போது நாங்கள் குறிப்பிட்டதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் குறிப்பிட்டதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் கடும் அதிருப்தி வெளிப்படுத்தினர்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை சரியானதா என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் தனது மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த மக்களும் மத்திய வங்கியை கடுமையாக விமர்சிக்கிறார்கள் ஆகவே இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன் என அரசாங்க நிதி தொடர்பாக குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா சபையில் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் கட்சித் தலைவர் கூட்டத்துக்கும், அரசாங்க நிதி தொடர்பான குழு கூட்டத்துக்கும் முன்னிலையாகியுள்ளனர். அறிக்கை கிடைக்கப்பெற்றதும் விவாதம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக ஹர்ஷ டி சில்வாவின் காலைவாரும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு சபையில் இருந்து வெளியேறினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார். இதன் பின்னர் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பினர். இதனால் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விகளுக்கு எழுந்து பதிலளித்த ஜனாதிபதி,
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
ஆகவே குழுவின் தலைவர் அறிக்கை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று குறிப்பிட்டு, அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவை நோக்கி' அறிக்கையை எப்போது சமர்ப்பிப்பீக்ள்' என்று வினவினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா 'அறிக்கையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,அறிக்கை சமர்ப்பித்தவுடன் அது பற்றி பேசலாம் அதை விடுத்து இங்கு ஆடி வேண்டி ய தேவை இல்லை என்றார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர் நாலக கொடஹேவா, நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறார்கள். அரச அதிகாரிகளுக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்படும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எவரும் பேசுவதில்லை.
மத்திய வங்கி சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும் அமைச்சரவையில் கடுமையாக பேசியுள்ளார். அரச சேவையாளர்கள் 2 0000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள சுயாதீன அதிகாரங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த அதிகாரத்தை மீள்பரிசீலனை செய்யுங்கள் என்று வலியுறுத்தினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கிக்கு மாத்திரம் சுயாதீன அதிகாரம் வழங்கப்படவில்லை. பங்குச்சந்தைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பங்குச்சந்தையில் எவ்வாறு சம்பாதிக்கிறார்கள் என்பதை என்னிடம் கேட்க வேண்டாம் ஹர்ஷ டி சில்வாவிடம் கேளுங்கள் என்றார்.
இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்க மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டார்கள். கூட்டத்தின் போது அவர்கள் குறிப்பிட்டதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்,நாங்கள் குறிப்பிட்டதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த கூட்டு ஒப்பந்தம் தொழில் அமைச்சில் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே இந்த சம்பள அதிகரிப்பு சட்டவிரோதமானது. இதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் மாத்திரமல்ல,நாணய சபையும்,நாணய சபையை நியமித்த ஜனாதிபதியும் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா மத்திய வங்கியின் சம்பள கூட்டு ஒப்பந்தம் தொழில் அமைச்சில் பதிவு செய்யப்படவில்லை.அது ஒரு குறைப்பாடு என்பதை மத்திய வங்கியிள் ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.சம்பள அதிகரிப்பை தொடர்ந்து மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை குறித்து பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷமனிடம் நாணயம் அச்சிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.இதனை நாணய சபையின் முன்னாள் உறுப்பினர் சஞ்ஜீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கிக்கும்,நிதியமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தத்துக்கு அமைய எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பண வீக்கத்தை 05 சதவீதத்தால் நிலைப்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பணவீக்கம் இரண்டு வீதத்தால் அதிகரிக்கலாம் அல்லது இரண்டு வீதத்தால் குறைவடையலாம்.
1950 ஆம் ஆண்டு முதல் சம்பள அதிகரிப்பை மத்திய வங்கியே தீர்மானித்துக் கொள்கிறது.அதனை நாங்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் சம்பள அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு தார்மீக உரிமை கிடையாது.இது சரியானதொரு தீர்மானமா என்பதை தங்களின் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று மத்திய வங்கியின் ஆளுநரிடம் வலியுறுத்தினேன் என்றார்.
இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்புக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் முரண்பட்டுக் கொள்வது அவசியமற்றது.ஆகவே அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.
இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிதிச்சபையின் உறுப்பினர்களில் திறைசேரியின் செயலாளர் அங்கம் வகிக்கவில்லை.அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படமாட்டாது என திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் எவ்வாறு மத்திய வங்கியின் பணியாளர்களது சம்பளத்தை அதிகரிக்க முடியும் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த ஜனாதிபதி, 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜயவர்தனா நிதி தொடர்பான சட்டத்தை கொண்டு வந்தார். நாணய சபையின் மூன்று உறுப்பினர்களில் திறைச்சேரியின் செயலாளர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நான் பிரதமராக பதவி வகித்த போது நாணய சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரித்தேன்.
நாணய சபையின் உறுப்பினர்களில் திறைசேரியின் செயலாளர் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நிலைமை தற்போது மாற்றமடைந்துள்ளது.இந்தியா,பிரித்தானியா,அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்நிலைமை மாற்றமடைந்து விட்டது.மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்புக்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு,அந்த சட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.
மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்துக்கு முன்னிலையாகுமாறு நான் குறிப்பிட்டேன். அதற்கமைய மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்துக்கு முன்னிலையாகினார்கள். ஆளும், எதிர்தரப்பினர்கள் அவர்களிடம் கேள்வியெழுப்பினார்கள். அறிக்கை கிடைகக்கப்பெற்றதும் விவாதம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவின் காலை வாரி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது என்று குறிப்பிட்டு சபையில் இருந்து வெளியேறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM